பிரகாஷ்ராஜ் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்., பாஜக தொண்டர்களால் பரபரப்பு
பாஜகவிற்கு எதிராக பிரகாஷ்ராஜ் பிரச்சாரம் செய்வதைக் கண்டித்து ஆர்.எஸ்.எஸ்., பாஜக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு: கர்நாடக சட்டசபைத் தேர்தலில், பாஜகவிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு, எதிராக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், கடந்த சில மாதங்களாக பாஜகவிற்கு எதிராகப் பேசி வருகிறார். நாட்டு மக்களை பாஜக பிளவுபடுத்தப்பார்க்கிறது என்றும், மக்களின் மீது அக்கறை இல்லாத அரசு என்றும் அவர் பாஜகவை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
வருகிற மே 12ம் தேதி கர்நாடக சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவிற்கு எதிராகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இவரது பிரச்சாரத்திற்கு மக்களிடையே ஆதரவும் அதிகரித்து உள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், காவிரி பிரச்னையை தொடர்ந்து அரசியல் ஆக்க குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் செயல்பட்டு வருவதாகவும், சிந்தனையாளர்கள் கெளரி லங்கேஷ் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டதற்கு பாஜக தான் காரணம் என்றும் பிரகாஷ்ராஜ் குற்றம்சாட்டினார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலை கல்புர்கி நகரில் காரில் வந்த பிரகாஷ்ராஜை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.