கேரள அரசின் விதியை மீறிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்... தனியார் பள்ளியில் தேசிய கொடியை ஏற்றினார்
திருவனந்தபுரம்: கேரளாவில் சென்ற வருட சுதந்திர தின விழாவின் போது அங்கு உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கொடி ஏற்றுவதாக இருந்தது. ஆனால் அதற்கு கேரளா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
அவர் கொடி ஏற்றக்கூடாது என்று அங்கு சிலர் போராட்டங்கள் கூட நடத்தினார்கள். இந்த நிலையில் இந்த வருடம் குடியரசுத் தின விழாவில் அவர் கொடி ஏற்றுவார் என்று கூறப்பட்டது.
அவர் கொடி ஏற்றுவதை தடுக்கும் வகையில் கேரள அரசு நிறைய விதிமுறைகளை புகுத்தியது. ஆனால் அவர் அனைத்து விதிகளையும் மீறி தேசிய கொடியை ஏற்றி இருக்கிறார்.
விதி என்ன
கேரள அரசு ஒருவாரத்திற்கு முன்பு அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் ''கேரளாவில் இருக்கும் பள்ளிகளில் பள்ளி தலைவர் மட்டுமே கொடியை ஏற்ற வேண்டும். அவரை தவிர யாரும் கொடி ஏற்றக்கூடாது.'' என்று குறிப்பிட்டு இருந்தனர்.
ஏன் இந்த விதி
கேரளாவின் பாலக்காட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளருக்கு சொந்தமான பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கொடி ஏற்றப் போவதாக தகவல் வந்தது. இதை தடுக்கவே இந்த புதிய விதி புகுத்தப்பட்டது. இதை அனைத்து பள்ளிகளும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
விதியை மீறினார்
ஆனால் இன்று குடியரசுத் தின விழாவில் மோகன் பாகவத் அனைத்து விதிகளையும் மீறி கொடியை ஏற்றினார். அது தனியார் பள்ளியாகும். மேலும் ஆர்.எஸ்.எஸ் கட்சி நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டார்கள்.
சர்ச்சை
தற்போது இந்த பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. இந்த விதி தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று அந்த பள்ளி நிர்வாகம் குறிப்பிட்டு இருக்கிறது. அதே சமயத்தில் இந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஆளும் கட்சி தரப்பு தெரிவித்துள்ளது.