தாஜ்மஹால் முன் நமாஸ் செய்யக் கூடாது... ஆர்எஸ்எஸ் அமைப்பு கிளப்பும் அடுத்த சர்ச்சை!
தாஜ்மஹால் முன்பு வெள்ளிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் தொழுகைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் சார்ந்த அமைப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது.
டெல்லி : தாஜ்மஹாலை சுற்றுலாப் பட்டியலில் இருந்து நீக்கிய சர்ச்சை அடங்குவதற்கு ஆர்எஸ்எஸ் சார்ந்த அமைப்பு ஒன்று தாஜ்மஹால் முன்பு வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தக் கூடாது என்று போர்க்கொடி தூக்கியுள்ளது.
ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹால். முகலாய மன்னன் ஷாஜகான் தன்னுடைய காதல் மனைவிக்காக எழுப்பியது இந்த நினைவிடம். முழுவதும் பளிங்கு கற்களால் அமைக்கப்பட்ட தாஜ்மஹால் இந்தியாவின் போற்றுதலுக்குரிய அடையாளம்.
தாஜ்மஹால் முன்பு வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் இணைப்பு அமைப்பான அகில பாரதிய இதிஹாஸ் சங்கலன் சமிதி என்ற அமைப்பின் தேசிய செயலாளர் பால்முகுந்த் பாண்டே கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவ பூஜைக்கும் அனுமதியுங்கள்
தாஜ்மஹால் முன்பு நமாஸ் செய்ய அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு நமாஸ் செய்ய அனுமதி அளித்தால் சிவ பூஜைகளுக்கும் தாஜ்மஹாலில் அனுமதி தர வேண்டும். தேசிய நினைவுச் சின்னமான தாஜ்மஹாலில் ஒரு மதத்தினர் மட்டும் தங்களது மத உணர்வுளை குறிப்பிடும் வகையில் பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தாஜ்மஹால் சிவாலயத்தை இடித்து கட்டப்பட்டது
மேலும் தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு முன்னர் அந்த இடத்தில் சிவாலயம் இருந்ததாகவும், இதே போன்று முஸ்லிம் மன்னர்களால் இடித்து கட்டப்பட்ட நினைவிடங்களை பட்டியல் எடுத்து அங்கு உரிமை கோர உள்ளதாகவும் பாண்டே தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்து யுவா வாஹினி என்ற அமைப்பு தாஜ் மஹாலுக்குள் சிவ பூஜை செய்ய முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அடுத்த சர்ச்சை
இந்த சம்பவம் நடைபெற்ற சில நாட்களிலேயே ஆர்எஸ்எஸ் வரலாற்றுப் பிரிவு அமைப்பு இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளது. யுவா வாஹினி அமைப்பும் தாஜ்மஹால் சிவாலயத்தை இடித்து கட்டப்பட்டதாக குற்றம்சாட்டி இருந்தது.
என்னடா தாஜ்மஹாலுக்கு வந்த சோதனை
தாஜ்மஹால் சுற்றுலாவிற்கு ஏற்ற இடமல்ல என்று அதனை சுற்றுலாப் பட்டியலில் இருந்து உ.பி அரசு நீக்கியது. மதச் சாயம் பூசும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.