கல்வி முறையை மாற்ற வேண்டுமா? நாடு முழுவதும் சர்வே எடுக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
அகமதாபாத்: நாட்டின் கல்வி முறையை மாற்ற வேண்டுமா என்பது குறித்து பா.ஜ.கவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நாடு முழுவதும் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு வருகிறது.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதல் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கருத்து தொடர்ந்து இந்துத்துவா அமைப்புகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்துத்துவா அமைப்புகளின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது.
இந்த இயக்கத்தின் சார்பு அமைப்புகள் மூலமாக நாடு முழுவதும் பொதுமக்களிடம் தற்போதைய கல்விமுறையைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? என்று கேட்கப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் புனருத்தம் வித்யாபீடம் என்ற ஆர்.எஸ்.எஸ். சார்பு இயக்கம் இந்த கருத்து கேட்பை நடத்தி வருகிறது.
இதில் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையை உருவாக்க கல்வி முறை உதவுகிறதா? நல்ல குடும்பத் தலைவியாக பெண் இருப்பதைவிட பெண்களுக்கு உயர்கல்வி அவசியமா? உங்கள் குழந்தைகள் எவ்வளவு நேரம் டிவி பார்க்கின்றனர்? உங்கள் குழந்தைகள் ஆங்கில மீடியம் படிப்பதை விரும்புகிறீர்களா? தாய்மொழி வழி கல்வியை விரும்புகிறீர்களா? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.
இப்படி பெறப்படும் சர்வே முடிவுகள் 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட இருக்கிறது.