பசு இறைச்சி உண்ண மாட்டோம்.. ஆர்.எஸ்.எஸ். இஸ்லாமியர் பிரிவு திட்டவட்டம்
பசுமாடுகளின் இறைச்சியை உண்ண மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். இசுலாமிய பிரிவினர் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
டெல்லி: மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்துள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இஸ்லாமிய பிரிவினர் பசுக்களின் இறைச்சியை சாப்பிடமாட்டோம் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். இஸ்லாமிய பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் அயோத்தியில் இஃப்தார் விருந்து நடத்தியது. அப்போது அந்த அமைப்பின் உறுப்பினர்கள் பசு இறைச்சி சாப்பிடப்போவதில்லை என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் உண்ணா நோன்பை பசும்பால் அருந்தி முடித்துக் கொண்டனர். நாட்டின் அனைத்துப் பகுதியிலும் ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் கடைபிடித்து வருகிறார்கள். இந்த நிலையில் அசைவம் இல்லாமல் அயோத்தியில் இஃப்தார் விருந்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் தலைவர்கள் கூறும்போது, "பசு இறைச்சி நோயை உருவாக்குவது, ஆகவே, முஸ்லிம்கள் பசு இறைச்சியை உண்பதில்லை என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
மேலும் பசும்பால் ஆரோக்கியத்துக்கு நல்லது, அதில் மருத்துவ குணங்கள் உள்ளன" என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பசுக்களை பாதுகாப்பது மூலம் கிடைக்கும் பயன்களையும் ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம் பிரிவினர் அங்கீகரித்துள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்த்ரேஷ் குமார் கூறியுள்ளார்.