ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டது தவறு... அவர்கள் மீது நடவடிக்கை தேவை.. ஆர்எஸ்எஸ் தலைவர் தடாலடி
கொல்கத்தா: நேதாஜி பிறந்த நாள் விழாவின்போது, ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டது தவறு என்றும் அவ்வாறு கோஷமிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மே.வங்க ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.
நம் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய முக்கிய தலைவர்களில் ஒருவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவர் ஒடிசாவின் கட்டக் நகரில் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி பிறந்தவர். நேதாஜியின் 124ஆவது பிறந்த நாள் கடந்த வாரம் சனிக்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் மத்திய அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துகொண்டர். அதில் மம்தா பானர்ஜி பேசத் தொடங்கும்போது, கூட்டத்தில் ஒரு பகுதியினர், அவரை பேசவிடாமல் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டனர். இதனால் கடுப்பான மம்தா பேசாமலேயே திரும்பிவிட்டார்.
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இது குறித்து மேற்கு வங்க ஆர்ஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் ஜிஷ்ணு பாசு கூறுகையில், "நேதாஜிக்கு மரியாதை செலுத்தும் விதமாக நடத்தப்பட்ட அரசு விழாவில் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பப்பட்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. கோஷம் எழுப்பியவர்கள் நேதாஜியையும் மதிக்கவில்லை, ராமரையும் மதிக்கவில்லை. அந்த நிகழ்ச்சி நேதாஜிக்கு மரியாதை செலுத்த நடத்தப்பட்டது. அதில் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டவர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் மீது பாஜக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
மோடியின் திட்டம் நாசம்
ஆனால், இந்த நிகழ்ச்சியை பாஜக தரப்போ வேறு வகையில் பார்க்கிறது. இது குறித்துப் பெயர் வெளியிட விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், "கோஷம் எழுப்பியவர்களில் சிலர் வேறொரு மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய தலைவருக்கு நெருக்கமானவர்கள். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலைக் கருத்தில்கொண்டு, நேதாஜியின் பிறந்தநாளில் பிரதமரின் இந்த பயணம் மிக கவனமாக திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தை அவர்கள் கோஷம் எழுப்பி நாசமாக்கிவிட்டனர்.
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி ஒரு தேர்ந்த அரசியல்வாதி. அவர் இவ்வாறு கோஷம் எழுப்பப்பட்டவுடன், அதை தனக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக்கொண்டார். மிகவும் தந்திரமாக, நொடிப்பொழுதில் பாஜகவை அசவுகரியமான நிலைக்கு அவர் தள்ளிவிட்டார்" என்றார். மேலும், தன்னை நிகழ்ச்சிக்கு அழைத்து அவமானப்படுத்துவது போல இதை மாற்றிவிட்டார். இதற்கு பாஜகவால் சரியான முறையில் பதில் தர முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீறிய மம்தா
முதலில் பேசத் தொடங்கிய மம்தா, நேதாஜிக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியைக் கொல்கத்தாவில் நடத்த முடிவு செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறி தனது பேச்சைத் தொடங்கினார். அப்போதே சிலர் ஜெய் ஸ்ரீ ராம் எனக் கோஷமிட தொடங்கிவிட்டனர். இதனால் கோபமடைந்த மம்தா, "இது ஒன்றும் அரசியல் கட்சியின் நிகழ்ச்சி அல்ல. இது அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சி. இதில் கண்ணியம் காக்கப்பட வேண்டும். இதற்கு மேல் நான் பேசவில்லை" என்று கூறிவிட்டு, தனது பேச்சை முடித்துவிட்டார்.