ஹோமோசெக்ஸ் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் நிலைப்பாடு திடீர் மாற்றம்
மும்பை: ஹோமோசெக்ஸ் கிரிமினல் நடவடிக்கையா இல்லையா என்பது விவாதத்துக்குறியது என்று ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். ஹோமோசெக்சுக்கு எதிராக இருந்த கடும் நிலைப்பாட்டில் இருந்து, ஆர்எஸ்எஸ் தனது நிலைப்பாட்டை தளர்த்தியுள்ளது இதன் மூலம் தெரிகிறது.
பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் ராம் மாதவ் கூறுகையில், இந்திய தண்டனை சட்டத்தின் 377வது பிரிவில் ஹோமோ செக்ஸ் தண்டனைக்குறிய குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது விவாதத்துக்குறியது. அதே நேரம் குற்றச்செயல் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள செயல்களை நான் உயர்த்திபேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவின் கொள்கை முடிவுகளில் ஆர்எஸ்எஸ் பங்களிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஹோமோசெக்ஸ்சுக்கு எதிராக தனது நிலைப்பாட்டை ஆர்எஸ்எஸ் தளர்த்தியுள்ளது, ஹோமோசெக்ஸ் ஆதரவாளர்களை நிம்மதி பெருமூச்சுவிட செய்துள்ளது. இதுபற்றி சம உரிமைகளுக்கான போராட்ட குழுவை சேர்ந்த ஹரீஷ் ஐயர் கூறுகையில், "சரியான வழியில் அனைத்தும் சென்று கொண்டுள்ளது என்று நினைக்கிறேன். ஆர்எஸ்எஸ் நிலைப்பாடு நம்பிக்கை தந்துள்ளது" என்றார்.
ஹோமோசெக்ஸ் குற்றச்செயல் இல்லை என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பளித்ததும், அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் ஹோமோசெக்ஸ் குற்றச்செயல்தான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததும் நினைவுகூறத்தக்கது.