ராமர் கோவில் விவகாரம்... 'சமூக வலைதளவாசி'களுக்கு பயிற்சி கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ்.
டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டியதன் அவசியத்தை பரப்பும் வகையில் சமூகவலைதவாசிகளுக்கு இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்பதில் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் தீவிரமாக உள்ளன. இதற்கு பிரதமர் மோடி சிக்னல் காட்டிவிட்டதாகவும் விஸ்வ ஹிந்து பரிஷத் கூறி வருகிறது.
அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதும் கற்களும் கொண்டு வந்து குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த முயற்சியை நியாயப்படுத்தும் பிரசாரங்களை மேற்கொள்ள சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்பில் தீவிரமாக இயங்கும் இந்துத்துவா ஆதரவாளர்களுக்கு பயிற்சி அளிக்க ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீக்க வேண்டும், சகிப்பின்மை விவகாரங்களிலும் இதுபோல இந்துத்துவா குரலை சமூகவலை தளங்களில் நியாயப்படுத்துவதற்காக பயிற்சி முகாம்களை ஆர்.எஸ்.எஸ். நடத்தியிருந்தது. தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை நியாயப்படுத்தும் பிரசாரத்துக்கான பயிற்சி முகம் வரும் 20-ந் தேதி நடத்தப்பட உள்ளது.
இந்த பயிற்சி முகாமில் அயோத்தி ராமர் கோவில் தொடர்பான நீதிமன்ற ஆணைகள், தொல்லியல்துறை சான்றுகள் உள்ளிட்டவை குறித்து விவரிக்கப்பட உள்ளது. இதுவரை 1000 பேர் இப்பயிற்சி முகாமில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 250 பேர் மட்டும் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கப்பட உள்ளனர்.