கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் படுகொலை: கம்யூனிஸ்ட்டுகள் மீது குற்றம்சாட்டும் பா.ஜ.க
திருச்சூரில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
திருச்சூர் : திருச்சூர் அருகே நென்மேனிக்கரையில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் ஒருவர் நேற்று கொலை செய்யப்பட்டார். இது கம்யூனிஸ்ட் கட்சியினரின் சதி என்று பா.ஜ.க குற்றம் சாட்டி உள்ளது.
நேற்று மதியம் ஒரு மணி அளவில் ஆர்.எஸ்.எஸ் தொண்டரான ஆனந்த் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கார் ஒன்று அவர் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதனைத் தொடர்ந்து,காரில் இருந்து இறங்கிய நபர்கள் தாக்கியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தால் திருச்சூர் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ஆனந்தை தாக்கியவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லியும் மாவட்ட பா.ஜ.க கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலை செய்யப்பட்ட ஆனந்த் 2014ம் ஆண்டு சி.பி.எம் கட்சி உறுப்பினர் காசிம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியில் இருப்பவர் என்றும், முன்பகை காரணமாக இந்தக் கொலை நடந்து இருக்கிறதா என்று விசாரித்து வருகிறோம் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.