அரசு பஸ்ஸை ஆட்டையை போட்ட எம்டன்கள்! ஆந்திராவில் அதகளம்
ஹைதராபாத்: சைக்கிள், மோட்டார் பைக், ஏன் காரை கூட திருடிச்செல்வார்கள். ஆனால் ஆந்திராவில் அரசு பேருந்தை ஆட்டையை போட்டுச் சென்றுள்ளனர் சில எமகாதகர்கள்.
ஹைதராபாத் குஷாய் கூடா பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்து தினமும் செகெந்திராபாத்-எதுலாபாத் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர், ஹைதராபாத் அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டம், எதுலாபாத் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தினார்.
பணி முடிந்ததால் பேருந்து நிலையத்திலேயே உள்ள ஓட்டுநர்களின் ஓய்வறையில் உறங்கினார். பின்னர் நேற்று காலை எழுந்து பார்த்தபோது பேருந்து மாயமாகியிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் பேருந்தை தேடி அலைந்தார். பேருந்து நிலையத்தில் எங்கு தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து தனது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதிகாரிகளின் ஆலோசனைப்படி நேற்று காட்கேசரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.