சுரங்க மாபியா ரெட்டி மகளுக்கு ரூ500 கோடியில் திருமணம்: வருமான வரித்துறை விசாரிக்காதோ?
ரூ500 கோடியில் மகளுக்கு திருமணம் நடத்திய ஜனார்த்தன ரெட்டி மீது வருமான வரித்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: கருப்புப் பணம் பதுக்கியவர்கள் வெளியே வருவார்கள் என மத்திய அரசு கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ரூ500 கோடியில் சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டி ஆடம்பர திருமணத்தை நடத்தியுள்ளது குறித்து வருமானவரித்துறை விசாரிக்க வேண்டும் என புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு அரசியல்வாதியாக அமைச்சரானவர் ஜனார்த்தன ரெட்டி. பாரதிய ஜனதா கட்சிதான் ஜனார்த்தன ரெட்டிக்கு அடைக்கலம் கொடுத்தது.
பின்னர் சுரங்க முறைகேடு வழக்கில் சிறையில் தள்ளப்பட்டார் ஜனார்த்தன ரெட்டி. அப்போதே அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அத்துடன் ஜாமீனில் வெளிவந்த கடந்த 4 ஆண்டுகாலமும் அவரால் எந்த தொழிலும் செய்ய முடியவும் இல்லை.
ஆனால் தற்போது ரூ500 கோடியில் மகளுக்கு ஆடம்பர திருமணத்தை நடத்தியுள்ளார். நாடு முழுவதும் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இப்படியான நிலையில் ஜனார்த்தன ரெட்டி எப்படி இவ்வளவு பணத்தை புரட்டினார்? என்பது குறித்து வருமான வரித்துறையினர் விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான நரசிம்ம மூர்த்தி இது தொடர்பாக வருமான வரித்துறையிடம் புகாரும் கொடுத்துள்ளார்.