ராம் ரஹீம் இவ்வளவு சொத்துக்களை சேர்த்தது எப்படி? உண்மைகளை வெளியே கொண்டு வந்த ஆர்.டி.ஐ!
சாமியாரான ராம் ரஹிம் எப்படி இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு தற்போது பதில் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி: சாமியாரான ராம் ரஹிம் எப்படி இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு தற்போது பதில் அனுப்பப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத தனி நபர் ஒருவர் தகவல் அறியும் ஆணையத்தில் போலி சாமிரான ராம் ரஹீம் எப்படி இவ்வளவு பணத்திற்கு சொந்தக்காரர் ஆனார், அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் கேள்விக்கு அளிக்கப்பட்டுள்ள பதில்கள் அனைவரையும் திடுக்கிட செய்யும் வகையில் உள்ளது. இவர் சொத்துக்களை சேர்த்த முறையும், அதை நிர்வகித்த முறையும் மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் உள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்ட ராம் ரஹீம்
இந்தியாவின் வலிமையான நபர்களில் ஒருவர் என சில நாட்களுக்கு முன்பு புகழப்பட்டு வந்தவர் ராம் ரஹீம் சிங் . தேரா சச்சா அமைப்பின் தலைவரான இவர் மீது 2002 ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. 30 லட்சம் அபராதம் என்ற தண்டனையை இதுவரை இவர் ஏற்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பால் கலவரம்
இவருக்கு எதிராக தீர்ப்பு வந்ததை அடுத்து மிகவும் பண பலம் பொருந்திய தேரா சச்சா அமைப்பின் தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நடைபெற்ற இந்த கலவரத்தால் மூன்று மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தக் கலவரத்தால் மொத்தம் 41 பேர் மரணமடைந்தனர்.
சொத்துக்களை சேர்த்தது எப்படி
இந்த நிலையில் வெறும் சாமியாரான இவர் எப்படி இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டது. இதற்கு தற்போது பதிலளிக்கப்பட்டுள்ளது. இதில் " ராம் ரஹீம் தனக்கு சொந்தமாக உள்ள நான்கு தொண்டு நிறுவங்களின் பணத்தையும் முறைகேடாக தன்னுடைய மற்ற தொழில்களில் பயன்படுத்தி இருக்கிறார். தொண்டு நிறுவங்களின் பணத்திற்கு வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதால், இவர் இதுவரை அந்தப் பணத்திற்கு எல்லாம் ஒரு ருபாய் கூட வரி காட்டாமல் இருந்திருக்கிறார். இவருக்கு சொந்தமான 4 வெவ்வேறு தொண்டு நிறுவனங்களிடம் இருந்து வருடத்திற்கு 50 கோடிக்கும் மேல் இவர் பணம் எடுத்துள்ளார்'' என இந்த பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சொத்து சேர்ப்பதில் ஹனி பிரித் செய்த உதவி
அதேபோல் இந்த சொத்து சேர்ப்பில் ஹனி பிரித் எவ்வாறு உதவினார் என்பது குறித்தும் இந்த பதிலின் மூலம் தெரியவந்துள்ளது. அதன் படி " ஹனி பிரித் பல முறை ராம் ரஹீமுக்கு மூளையாக செயல்பட்டிருக்கிறார். அவருக்கு இரவு நேர கிளப்புகள் ஆரம்பிக்கும் திட்டம், படத்தில் நடித்து அதை அதிக அளவில் வியாபாரம் செய்யும் திட்டம், இசை நிகழ்ச்சிகள் நடத்தும் திட்டம்" என பல வித்தியாசமான திட்டங்கள் அளித்து இருக்கிறார். இதுவரை இவரது வீட்டில் இருந்து 12000 கோடி ரூபாய் மட்டும் ரொக்கமாக கைப்பற்றப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.