கை கொடுக்கும் மதுவிலக்கு; கேரளாவில் ஆளும் காங். கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும்- புதிய கருத்து கணிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பறிகொடுக்கும் என்றே பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறிவந்தன. இந்த நிலையில் நேற்று வெளியான புதிய கருத்து கணிப்பில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் தமிழகத்தைப் போல வரும் 16-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி, மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய 3 அணிகள் களத்தில் உள்ளன.
இடதுசாரிகளுக்கே வாய்ப்பு
இதில் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுவரையிலான பெரும்பாலான கருத்து கணிப்புகள் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவர் எனக் கூறி வந்தன.
திடீர் திருப்பம்
இந்நிலையில் மார்ஸ் மற்றும் புஷ் ஏஜென்ஸி ஆகியவை இணைந்து தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை நேற்று வெளியிட்டன. அதில் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 69 முதல் 73 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் போட்டி
மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 65 முதல் 69 இடங்களைக் கைப்பற்றக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 45% வாக்குகளும் இடதுசாரி கூட்டணிக்கு 43% வாக்குகளும் இதர கட்சிகளுக்கு 12% வாக்குகளும் கிடைக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கை கொடுக்கும் மதுவிலக்கு
ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் மதுவிலக்கு கொள்கைதான் அந்த கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பை அதிகரித்திருப்பதாக 90% பேர் கூறியுள்ளனர். அதே நேரத்தில் சோலார் பேனல் ஊழல் காங்கிரஸுக்கு பெரும் பாதகமாக உள்ளதாகவும் பெரும்பாலான வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.