மும்பை ரயில் நிலைய பாலம் விபத்துக்கு காரணம் இரு வதந்திகள்.. பரபரப்பு தகவல்
மும்பை எல்பின்ஸ்டோன் என்ற பாலம் உடையும் என பரவிய வதந்தியே அங்கு உண்டான உயிர் பலிக்கு காரணம் என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பை: மும்பை எல்பின்ஸ்டோன் பாலத்தில் உண்டான கூட்டநெரிசலில் சிக்கி 22 பேர் பலியானதற்கு, அங்கு பரவிய இரண்டு வதந்திகளே முக்கிய காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மும்பை எல்பின்ஸ்டோன் சாலை மேம்பாலத்தில் ரயில் நிலையம் செல்லும் மக்கள் மழைக்காக ஒதுங்கியுள்ளனர். நேற்று மும்பையில் கனமழை பெய்த காரணத்தால் ரயில் நிலையத்துக்குச் செல்ல இருந்த மக்கள் கூட்டமாக அங்கு ஒதுங்கியுள்ளனர்.
இரு வதந்திகள்
அப்போது பரவிய இரண்டு வதந்திகளால்தான் உயிர் பலியானது என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முதலில் ரயில் நிலையத்தில் மின் கசிவு என ஒரு வதந்தியை பரப்பிவிட்டனர்.
முண்டியடித்த மக்கள்
அடுத்து, கூட்டத்தில் யாரோ, 'இத்தனை கூட்டத்தை இந்த பாலம் தாங்காது. பாலம் உடைந்துவிடும்' என கூறியுள்ளனர். இது அங்கிருந்த மக்களிடம் பரவ, பாலம் உடைந்துவிடுமோ என்கிற பதற்றத்தில் மக்கள் அவசரம் அவசரமாக முண்டியடித்துக்கொண்டு வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்த்துள்ளனர். மேலும் 80க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் நடந்தது இப்படித்தான்
இந்த சம்பவத்தைப் பார்த்த ஒருவர் கூறுகையில், பாலம் உடைந்துவிடும் என்ற வதந்தி பரவியதும் மக்கள் இங்கிருந்து தப்பிக்க வேண்டும் என நெருக்கியடித்து ஓடியதால் தான் மரணம் நிகழ்ந்தது என கூறினார்.
மூச்சுத்திணறல்
இந்த சம்பவத்தின் போது பெண்கள் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று திகைத்து நின்றனர். ஆனால் ஆண்கள் ஒருவர் மேல் ஒருவர் ஏறி தப்பித்தனர். இதனால் பெண்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர்.