உ.பி.,யில் ஒரு கிலோ உப்பு ரூ.200-க்கு விற்பனை.. வதந்தியால் விபரீதம்
உத்தரப்பிரதேசத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிளம்பிய வதந்தியால் ஒரு கிலோ உப்பு ரூ.200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பாட்னா: உத்தரபிரதேச மாநிலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிளம்பிய வதந்தியால் அம்மாநிலத்தில் ஒரு கிலோ உப்பு 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இன்றே வாங்கி இருப்பு வைக்கவில்லை என்றால் இன்னும் சில மாதங்களுக்கு உப்பு கிடைக்காது எனவும் வதந்திகள் பரவின. இதனால் பீதியடைந்த மக்கள் உப்பு வாங்குவதற்காக கடைகளுக்கு படையெடுத்தனர்.
மக்கள் அதிகளவு உப்பை வாங்கிக் குவிப்பதை அறிந்த சில வியாபாரிகள், ஒரு கிலோ உப்பை 200 ரூபாய்க்கு விற்கத் துவங்கியுள்ளனர். வடக்கு உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் லக்னோ, அலகாபாத், மொரதாபாத் ஆகிய இடங்களில் அதிக விலைக்கு உப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே வட மாநிலங்களில் உப்பு தட்டுப்பாடு ஏதும் இல்லை எனவும், உப்பு விலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார். மேலும், வதந்தி பரப்புவோர் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.