டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவு சரிவு.. 72 ரூபாய்க்கு கீழே வீழ்ச்சி
சென்னை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் சரிவடைந்துள்ளது. 9 மாதங்களில் முதல் முறையாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 72 ரூபாயாக பெரும் சரிவடைந்துள்ளது.
வியாழக்கிழமை மாலை வர்த்தக முடிவில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.81 என்ற அளவில் இருந்தது. இன்று காலை 9:20 மணி நிலவரப்படி, ரூபாய் மதிப்பு 72.02 ஆக குறைந்தது.
வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களால் இந்திய பங்குகள் விற்பனை செய்யப்படும் நிலையில், டிசம்பர் 2018 க்குப் பிறகு முதல் முறையாக இந்திய ரூபாய் இன்று, ஒரு டாலருக்கு 72 க்கு கீழே சரிந்து அதிர்ச்சியளித்துள்ளது.
பொருளாதாரத்தில் நிலவும் மந்தநிலையை மாற்றுவதில், இந்திய அரசு செயலற்ற தன்மையுடன் இருப்பது முதலீட்டாளர்களை கவலையடையச் செய்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேற்று ரூ. 903 கோடி மதிப்புள்ள இந்திய பங்குகளை விற்றுள்ளனர். இது உட்பட, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ. 10,655 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது ரூபாய் மதிப்பு சரிவுக்கு வழிவகுத்துள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு காரணங்களை தவிர, வெளிநாட்டு சந்தைகளில் டாலர் வலுவான நிலையில் இருப்பதும், ரூபாய் மதிப்பு குறைய ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்து வரும் வர்த்தக பதற்றம், உலகளாவிய நிதிச் சந்தைகளில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சீன யுவானின் சமீபத்திய இறங்குமுகம் மற்றும் ஹாங்காங்கில் நடைபெறும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் முதலீட்டாளர்களின் கவலைகளை அதிகரித்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிசம்பர் 15 ஆம் தேதி வரை சீனப் பொருட்களுக்கான கூடுதல் வரிகளை தாமதப்படுத்த ஒப்புக் கொண்டாலும், இந்த ஒப்பந்தம் நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பில்லை என்ற பீதி வர்த்தகர்களிடம் உள்ளது.