பாஜக ஆட்சியிலும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டது: மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி
டெல்லி: பாஜக தலைமையிலான ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போதும் ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சிக் காணப்பட்டது என மோடிக்கு பதிலடி தரும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். மேலும், இதன் மூலம் மோடியின் வரலாற்றுப் பாடம் தவறானதாகவே இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
சமீபத்திய தனது உரையில், பாஜக தலைமையிலான ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையவில்லை எனத் தெரிவித்திருந்தார் குஜராத் முதல்வரும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளருமான நரேந்திர மோடி.
இந்நிலையில், மோடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது...
இந்திய ரூபாயின் மதிப்பு...
தேசிய ஜனநாயகக் கூட்டணி முதன் முதலில் ஆட்சிப் பொறுப்பேற்ற 1998-ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 39.49 ஆக இருந்தது.
வீழ்ச்சி....
தேர்தலுக்குப் பின்பு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற 1999-ம் ஆண்டு மே மாதத்தில் ரூபாயின் மதிப்பு ரூ. 42.84 ஆக வீழ்ச்சியடைந்தது.
மேலும் சரிவு...
பாஜக கூட்டணி ஆட்சியின் இறுதி கால கட்டமான 2004-ம் ஆண்டு மே 21-ம் தேதி ரூபாயின் மதிப்பு மேலும் சரிவடைந்து ரூ. 45.33 ஆக ஆனது.
வரலாற்றுப்பாடம்....
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஏற்கெனவே பல வரலாற்று பாடங்களை எடுத்து வருகிறார். அதில் ஒரு பாடமாக இந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சி விவகாரத்தையும் வைத்துக் கொள்ளலாம்' என அவர் தெரிவித்துள்ளார்.