சுஷ்மா-லலித் மோடி இ-மெயிலை லீக் செய்தது டைம்ஸ் நவ் இல்லையாமே..!
டெல்லி: சுஷ்மா சுவராஜ்-லலித் மோடி இடையேயான இ-மெயில் உரையாடலை லீக் செய்தது இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் பத்திரிகை அதிபர் ருபெர்ட் முர்டோச் என்று லலித் மோடியே தெரிவித்துள்ளார். இந்தியாவின் டைம்ஸ் நவ் சேனல், தாங்கள்தான் முதலில் ஸ்டோரியை பிரேக் செய்தோம் என்று ஓயாமல் கூறிவரும் நிலையில் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊழல் புகாரில் சிக்கிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, இங்கிலாந்து அரசு விசா வழங்க வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பரிந்துரை செய்ததாக விவரிக்கும் இ-மெயில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
லலித் மோடிக்கு உதவியது மனிதாபிமான அடிப்படையில்தான் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா தெரிவித்திருப்பதை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து, அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், லலித் மோடியை தொடர்புகொண்ட டைம்ஸ் நவ் சேனலுக்கு அவர் இன்டர்வியூ கொடுக்க மறுத்து விட்டார். அதேநேரம், போட்டியாளரான இந்தியாடுடே டிவி சேனலுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அப்போது லலித் மோடி கூறியதாவது: சுஷ்மா மற்றும் எனக்கு நடுவேயான இ-மெயில் கலந்துரையாடலை லீக் செய்தது பத்திரிகை ஜாம்பவான் ருபெர்ட் முர்டோச். இவர்தான் சண்டே டைம்ஸ் அதிபராகும்.
ஆஸ்திரேலியாவில் பிறந்து பத்திரிகைதுறையில் கொடிகட்டி பறக்கும் ருபெர்ட் முர்டோச் குழும பத்திரிகைகள் எப்போதுமே வழக்கத்துக்கு மாறாகவே செய்திகளை சேகரிக்கின்றன. எனக்கும் சுஷ்மா சுவராஜ், அவரது கணவர் சுஷ்மா குஷால், அந்த தம்பதிகள் மகள் பன்சுரி ஆகியோருக்கும் நல்ல பழக்கம் இருக்கிறது.
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா முதல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வரையில், மட்டுமல்லாமல் காங்கிரசின் ராஜிவ்சுக்லாவும் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்துள்ளனர். மாஜி மத்திய அமைச்சர் சிதம்பரம்தான் என்னை குறி வைத்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஐரோப்பியாவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து என்னை முடக்க பார்த்தது. இவ்வாறு லலித் மோடி தெரிவித்துள்ளார்.