பாக் மீது பதிலடி... இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு!
டெல்லி: யூரி தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.
யூரியில் இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் சிறப்புப் படையினர் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியானதாகத் தெரிகிறது. ஆனால் இதுகுறித்து வாய்திறக்காமல், அப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை என்கிற ரீதியில் உள்ளது பாகிஸ்தான்.
இந்நிலையில், இந்தியாவின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் அரஷ்யத் தூதர் அலெக்ஸாண்டர் கடாகின் கூறுகையில், "இந்தியாவில் உள்ள ராணுவ முகாம்கள், அப்பாவி பொதுமக்கள் ஆகியோரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இச்சூழலில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையை ரஷ்யா வரவேற்கிறது. எந்தவொரு நாட்டுக்கும் தன் குடிமக்களை பாதுகாக்கும் உரிமை உண்டு. அதன்படியே, இந்தியாவின் ராணுவ நடவடிக்கையும் அமைந்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ரஷ்யா துணை நிற்கும்," என்றார்.
பாகிஸ்தான் - ரஷ்யா கூட்டு ராணுவப் பயிற்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இது குறித்து இந்தியா கவலை கொள்ள வேண்டாம். இந்தப் பயிற்சி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கவில்லை," என்றார்.