ரஷ்யா ஒரு நம்பிக்கைக்குரிய நண்பன்: பிரதமர் மோடி புகழாரம்
டெல்லி: இந்தியாவுக்கு ரஷ்யா ஒரு நம்பகமான நண்பன் என்று கூறியுள்ள பிரதமர் நரேந்திரமோடி, சோதனையான காலகட்டங்களில் இந்தியாவுக்கு ரஷ்யா பக்கபலமாக இருந்துள்ளதையும் அந்த நாட்டு துணை பிரதமரிடம் நினைவுகூர்ந்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ரஷ்ய துணை பிரதமர் டிமித்ரி ஓ ரோகோஜின், இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திரமோடிக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதாகவும், இந்தியாவுடன் ராணுவரீதியிலான ஒத்துழைப்பை பேண ரஷ்யா தயாராக இருப்பதாகவும் புட்டின் தெரிவித்ததாகவும், ரோகோஜின் மோடியிடம் கூறினார்.
ரோகோஜின்னிடம் பேசிய மோடி, ரஷ்யாவுடன் ஆக்கப்பூர்வமான, வருங்காலம்சார்ந்த ஒத்துழைப்பை அளிக்க இந்தியா தயாராக உள்ளது. இவ்வாண்டு இறுதியில் புட்டினை சந்தித்து பேசும்போது இதை அவரிடம் தெரிவிப்பேன். ரஷ்யா எப்போதுமே இந்தியாவுக்கு நம்பிக்கைக்குறிய நாடுதான். சோதனையான காலகட்டங்களிலும் ரஷ்யா இந்தியாவுக்கு பக்கபலமாக இருந்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு துறை வல்லமையில் ரஷ்யாவுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது. எனவே ரஷ்யா குறித்து எங்கள் நாட்டு மக்களிடம் மிகுந்த மதிப்பு உள்ளது. இந்த உறவை மேலும் மேம்படுத்த இந்தியா முன்வரும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ், வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், பிரதமருக்கான முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஷ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடனிருந்தனர்.