மோடி - புதின் சந்திப்பு... இந்தியா, ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
டெல்லி: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரேசிலில் கடந்த ஜூலை மாதம் நடந்த பிரிக்ஸ் மாநாட்டிலும், ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் நடந்த ஜி-20 மாநாட்டிலும் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி. அதன் தொடர்ச்சியாக இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்றிரவு இந்தியா வந்தார் புதின். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று பிரதமர் மோடியை புதின் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் அணுசக்தி, இயற்கை எரிவாயு, ராணுவ கொள்முதல் உட்பட 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அதைத் தொடர்ந்து மோடியும், புதினும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது புதின் கூறுகையில், ‘வாஜ்பாய் காலத்தில் இருந்தே எனக்கு மோடியை தெரியும். இந்தியாவுடனான உறவுகளுக்கு ரஷ்யா எப்போதுமே முன்னுரிமை கொடுக்கும்.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் சிறந்த முறையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் நல்லுறவு அதிகரித்துள்ளது. இந்தியாவுடன் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்த ரஷ்யா விரும்புகிறது. புதிய வாக்குறுதிகளும், ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கு இடையே உருவாகி உள்ளன,' என்றார்.
இச்சந்திப்பு தொடர்பாக மோடி பேசுகையில், ‘புதின், வாஜ்பாய் ஆகியோர் கடந்த 2002ம் ஆண்டில் இந்திய ரஷ்ய கூட்டு சந்திப்பை ஏற்படுத்தினர். இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யாவின் அதிபர் புடின், இருநாட்டு உறவுகளுக்கு பாலம் அமைத்தவர் ஆவார். பல்வேறு இக்கட்டான நிலையில் ரஷ்யா இந்தியாவிற்கு உதவி செய்துள்ளது. ரஷ்யாவுடனான வெளியுறவுக் கொள்கை எந்த சூழ்நிலையிலும் மாறாது.
கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் பாதுகாப்புதுறையில் சிறந்த நட்பு நாடாக ரஷ்யா விளங்குகிறது. இந்தியா, ரஷ்யாவிடையே நட்புறவு சிறப்பாக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. கூடங்குளத்தில், 2,3 அணு உலைகள் செயல்படுத்தப்படும். அதற்கு ஒத்துழைக்க ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது,' எனத் தெரிவித்தார்.
இந்தாண்டில் மோடி-புடின் இடையே நடைபெறும் 3வது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய மொழியில் புதினை வரவேற்ற மோடி :
இதற்கிடையே புதின் வருகை குறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ரஷ்ய அதிபரை வரவேற்கும் விதமாக அவர் ரஷ்ய மொழியிலேயே மூன்று பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அப்பதிவில் இந்தியா வந்துள்ள புதினை மோடி வரவேற்றுள்ளதாக பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஜப்பான் பிரதமர் ஷின்ஷே அபேவின் இந்திய வருகைக்கு முன்னதாக மோடி ஜப்பான் மொழியில் டிவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அந்த வரிசையில் தற்போது புதினை கெளரவிக்கும் வகையில் அவரது பாஷையிலேயே வரவேற்று டிவிட் போட்டுள்ளார்.
இதன் மூலம் இந்திய, ரஷ்ய உறவில் நிலவி வரும் தொய்வு நீங்கி இரு தரப்பு உறவும் மீண்டும் வலுப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.