ரஷ்ய தூதர் டெல்லியில் மரணம்.. அலெக்சாண்டர் கடாகின் உடல் நலமின்றி உயிரிழப்பு.. மோடி இரங்கல்
இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடாகின் டெல்லியில் இன்று மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லி: ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடாகின் டெல்லியில் இன்று மரணம் அடைந்தார் என்பதை இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது.
அலெக்சாண்டர் கடாகின் இந்தியாவின் ரஷ்ய தூதராக பணி புரிந்து வந்தார். 67 வயதான அவருக்கு உடல் நலமின்றி இருந்தார். இந்நிலையில், இந்தியாவின் குடியரசு தினமான இன்று அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக மறைந்தார் என்று ரஷ்ய தூதரகம் அறிவித்தது.
அலெக்சாண்டர் கடாகின் 2009 ஆம் அக்டோபர் முதல் இந்தியாவின் தூதராக பணியாற்றினார். முன்னதாக, 1999 முதல் 2004 வரை துணைத் தூதராகவும் இந்தியாவில் சேவையாற்றியுள்ளார். இந்திய ரஷ்ய உறவின் மேம்பாட்டில் நெருங்கிய தொடர்பில் இருந்த அலெக்சாண்டர் கடாகின் மறைந்தார் என்று இந்தியாவின் ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
அலெக்சாண்டர் கடாகின் மறைவிற்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அலெக்சாண்டர் சிறந்த ராஜதந்திரி என்றும், இந்தி நன்றாக பேசத் தெரிந்த இந்தியாவின் நல்ல நண்பர் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்திய ரஷ்ய உறுதியான உறவிற்கு சோர்வில்லாமல் கடாகின் பணியாற்றியவர் என்றும் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.