புதிய வெளியுறவுத்துறை செயலாளரானார் ஜெய்சங்கர்... அமெரிக்க தூதரக அதிகாரியாக இருந்தவர்!
டெல்லி: நாட்டின் புதிய வெளியுறவுத் துறை செயலாளராக, அமெரிக்க தூதரக அதிகாரியாக பணியாற்றி வந்த ஜெய்சங்கர் நியமிக்கப் பட்டுள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசின் நியமனக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக உள்ள சுப்ரமணியம் ஜெய்சங்கரை வெளியுறவுத் துறை செயலாளராக நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது.
வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த சுஜாதா சிங்கின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் மாதத்தோசு முடிவடைகிறது. ஆனால், அதற்கு முன்னதாகவே அவரை பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளது மத்திய அரசு.
அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் வந்து சென்ற நிலையில் இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களில் ஆற்றல் மிக்க ஒருவரை நியமிக்க பிரதமர் மோடி விரும்பியதாகவும், அதன் காரணமாகவே வெளியுறவுத்துறை செயலாளர் பொறுப்பில் ஜெயசங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, சுஜாதா சிங் உடனடியாக பதவி விலகியுள்ளார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க தூதரக அதிகாரியாக பணியாற்றி வந்த ஜெய்சங்கர், இன்று வெளியுறவுத்துறை செயலாளராக பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.