"காற்றில் எந்தன் கீதம்" பாடிய ஜானகி!... இனி இசைக் கச்சேரிகளிலும் இவரது குரல் ஒலிக்காது!!
"காற்றில் எந்தன் கீதம்" என்று பாடிய ஜானகி, மைசூர் விழாவில் பாடுவதுதான் கடைசி என்றும் இனி இசைக் கச்சேரிகளில் தான் பாடமாட்டேன் என்றும் எஸ்.ஜானகி தெரிவித்துள்ளார்.
மைசூரு: பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள பாடகி ஜானகி இனி இசைக் கச்சேரிகளில் பாட மாட்டார் என்று தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
தென்னகத்தின் இசைக் குயில் ஜானகி தனது காந்த குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜானகி கடந்த 1938-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி பிறந்தார். அவர் ஸ்ரீபைதிசுவாமி என்பவரிடம் இசை பயின்றார். பின்னர் 3 வயதிலிருந்து அவர் தனது கச்சேரியை தொடங்கினார்.
எத்தனை பாடல்கள்
எஸ்.ஜானகி பாடகியாக அறிமுகமானது விதியின் விளையாட்டு என்ற தமிழ் படத்தில்தான். அவர் 17 இந்திய மற்றும் அயல்நாட்டு மொழிகளில் சுமார் 48,000 பாடல்களைப் பாடியுள்ளார்.
அன்னக்கிளி
அன்னக்கிளி படத்தில் இவர் பாடிய அன்னக்கிளி உன்னை தேடுதே பாடல் இன்றும் கிராமப்புறங்களில் உள்ள டீக்கடைகளில் ஒலித்து கொண்டிருக்கிறது. அதேபோல் 16 வயதினிலே படத்தில் செந்தூரப்பூவே செந்தூரப்பூவே... , கடலோர கவிதைகள் படத்தில் அடி ஆத்தாடி என் மனசுல...., ஜானி படத்தில் காற்றில் எந்தன் கீதம்..., தேவர் மகன் படத்தில் இஞ்சி இடுப்பழகா... சங்கமம் படத்தில் மார்கழி திங்கள் அல்லவா ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.
சினிமாவில் பாடுவதில்லை
79 வயதாகும் ஜானகியின் குரல் இன்றும் அவர் பாடிய முதல் பாடலின் குரல் போல் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அத்தகைய பெருமையை பெற்ற அவர் சினிமாவில் பாடுவதில்லை என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தார். இந்நிலையில் ஜானகி சாரிடபிள் டிரஸ்ட் என்ற அறக்கட்டளை மூலம் மன நலம் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்டி வருகிறார்.
கடைசி கச்சேரி என அறிவிப்பு
மன நலம் பாதித்த குழந்தைகளுக்காக நிதி திரட்ட வேண்டி நேற்று மைசூரில் மனசாகனோத்ரி என்ற இடத்தில் ஆம்பி தியேட்டரில் இசைக் கச்சேரியை நடத்தினார். நிகழ்ச்சிக்கு பிறகு அவர் கூறுகையில், என்னுடைய தொழிலால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். புதிய மற்றும் இளம் கலைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக நான் இனி இசைக் கச்சேரிகளிலும் பாடமாட்டேன். மைசூர் கச்சேரிதான் எனது கடைசி கச்சேரி என்றார்.
பாடகர்களும் வருத்தம்
இவரது இந்த அறிவிப்பு ரசிகர்களை மிகவும் வேதனையில் ஆழ்த்தியது. சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டதால் இவரது குரலை இசைக் கச்சேரிகளில் கேட்டு ரசித்தனர். தற்போது இசைக் கச்சேரிக்கும் முழுக்கு போட்டு விட்டதால் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மூத்த கலைஞர்கள் ஜெயந்தி, பாரதி விஷ்ணுவர்தன், ஹரிணி, ராஜேஷ், சிவ்ராம், ஹேமா சவுத்ரி உள்ளிட்டோரும் வருத்தமடைந்தனர்.