"மதிக்காத" காங்கிரஸை விட்டு விலகி "மதிப்புமிக்க" பாஜகவில் இணைந்தார் எஸ்.எம்.கிருஷ்ணா!!!
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருந்த கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ். எம். கிருஷ்ணா இன்று அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
டெல்லி: கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியிருந்த நிலையில் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இன்று இணைந்தார்.
1932ம் ஆண்டு பிறந்த எஸ்.எம். கிருஷ்ணாவிற்கு தற்போது 84 வயதாகிறது. கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்த கிருஷ்ணா சட்டம் பயின்றவர். சட்ட மேற்படிப்பை அமெரிக்காவிற்கு சென்று பயின்றார்.
படிப்பை முடித்து தாயகம் திரும்பிய பின்னர் 1962ல் கர்நாடக சட்டசபைக்கு பிரஜா சோஷலிஸ்ட் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியில் கிருஷ்ணா
பின்னர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிருஷ்ணா, இந்திரா காந்தி அமைச்சரவையில் 1983 - 84 ஆம் காலகட்டத்தில் தொழில் துறை அமைச்சராகவும், 1984- 85 காலகட்டத்தில் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பணியாற்றினார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
தொடர் பதவிகள்
இதனைத் தொடர்ந்து, 1996 மற்றும் 2006 காலகட்டத்தில் ராஜ்ய சபா உறுப்பினராக எஸ்.எம். கிருஷ்ணா பணியாற்றினார். 1989 மற்றும் 1992 இடைப்பட்ட காலத்தில் கர்நாடக சட்டசபையின் சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார்.
கர்நாடக முதல்வர்
காங்கிரஸ் கட்சியின் தலைமையில் கர்நாடகத்தில் அமைந்த ஆட்சியில் 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை அம்மாநிலத்தின் முதல்வராக எஸ்.எம். கிருஷ்ணா பதவி வகித்தார். அதே போன்று 2009-ம் ஆண்டு வரை மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றினார். இவை எல்லாமே காங்கிரஸ் கட்சியில் இருந்த போது அவர் வகித்த பதவிகள் ஆகும்.
மரியாதை இல்லை
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை என்று கூறி காங்கிரஸ் கட்சியில் இருந்து கிருஷ்ணா வெளியேறினார். மறுநாளே பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா எஸ்.எம். கிருஷ்ணா பாஜகவில் இணைவார் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்று பாஜகவில் எஸ்.எம். கிருஷ்ணா இணைந்தார்.