ராஜபக்சே உள்ளிட்டோருக்கு செட்டிநாடு சிக்கன், இறால் வறுவலுடன் பிரணாப் விருந்து
டெல்லி: இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு செட்டிநாட்டு சிக்கன் உள்ளிட்ட பல மாநிலங்களின் புகழ் பெற்ற உணவு வகைகள் விருந்தில் பரிமாறப்பட உள்ளன. இதில் கலந்துகொள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று பதவியேற்பு
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பாஜகவின் நரேந்திரமோடியை பிரதமராக தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து இந்திய நாட்டின் 15வது பிரதமராக இன்று மாலை நரேந்திரமோடி பதவியேற்றுக்கொள்கிறார். இந்த பதவியேற்வு விழாவில் பங்கேற்க தெற்காசிய கூட்டமைப்பிலுள்ள நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கும் விருந்தில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் வருகையால் சர்ச்சை
இந்தியா மீது தீவிரவாத தாக்குதல்களை நடத்தும் தீவிரவாதிகளுக்கு உடந்தையாக செயல்படும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கும், இலங்கையில் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த அந்த நாட்டு அதிபர் ராஜபக்சேவுக்கும் இந்தியா அழைப்புவிடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் பிரதமர் வருகைக்கு சிவசேனை கட்சியும், ராஜபக்சே வருகைக்கு தமிழகத்திலுள்ள பாஜக, காங்கிரஸ் தவிர்த்த பிற கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
தமிழக கட்சிகள் எதிர்ப்பு
மதிமுகவை தொடர்ந்து, அதிமுக, திமுக முதலிலேயே தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவிட்ட நிலையில், பாமக மெதுவாக அதே நேரம் மென்மையாக இதை எதிர்த்தது. விஜயகாந்தின் தேமுதிக, பூனைக்கும் நண்பன், பாலுக்கும் காவல் என்பதைப்போல அப்படி, இப்படி பேசி சமாளித்துக் கொண்டுள்ளது.
மெனு கார்டு ரெடி
மோடி இன்று மாலை குடியரசு தலைவர் மாளிகையில் பதவியேற்றதும், ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் சார்பில், இரவு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருந்தில் பரிமாறப்படும் உணவு வகைகளை குடியரசு தலைவர் மாளிகை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் இறுதி செய்துள்ளனர். இதற்கு ஜனாதிபதி மாளிகை 'செஃப்கள்' உதவி செய்துள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த உணவு வகை புகழ்பெற்றதோ, அதை மெனுவாக்கியுள்ளனர்.
சிக்கன், இறால்
இறால் சுக்கா, சிக்கன்செட்டிநாடு, பிர்பாலி கோப்தா கறி (முகலாய்), ஜெய்ப்பூரி பிண்டி (ராஜஸ்தான்), தால் மக்கானி (பஞ்சாப் ), போட்டோல் தோர்மா (மேற்கு வங்கம் ), கேளாமேதி நு சாக் (குஜராத்) ஆகியவை இந்த மெனுவில் இடம்பெற்றுள்ள முக்கிய சாப்பாட்டு ஐட்டங்கள். இதில் குஜராத்தின் கேளாமதி நு சாக் எனப்படும் உணவு வெந்தையம் மற்றும் வாழைப்பழத்தை கொண்டு தயாரிக்கப்பட்டது. எனவே கசப்பும், இனிப்பும் கலந்து இருக்குமாம்.
வெற்றிலை பாக்கு உபசரிப்பு
மெயின் சாப்பாடு ஐட்டங்கள் தவிர நொறுக்கு தீனியாக சிக்கன் மற்றும் மட்டன் டிக்கா, தந்தூரி ஆலூ, அராபி கபாப், முலாம் பழ ஜூஸ் பரிமாறப்படுகிறது. விருந்து முடிந்ததும், விருந்தினர்களுக்கு வெற்றிலை கொடுத்து உபசரிக்கப்பட உள்ளது.
நான்காயிரம் பேருக்கு ஸ்நாக்ஸ்
குடியரசு தலைவர் அளிக்கும் விருந்தில் நரேந்திரமோடியும், அவரது அமைச்சரவை சகாக்களும் பங்கேற்று சார்க் நாடுகளின் விவிஐபிகளுடன் கலந்துரையாடுவார்கள். முன்னதாக பதவியேற்பு நடைபெற்றதும், குடியரசு தலைவர் மாளிகையில் பார்வையாளர்களாக இருக்கும் நான்காயிரம் பேருக்கும், குஜராத்தின் டோக்லா எனப்படும் தின்பண்டம் உட்பட ஆறு வகையான ஸ்நாக்ஸ் அளிக்கப்பட உள்ளது.
குஜராத்தை குஷிபடுத்தவா..?
விருந்து நிகழ்ச்சியில், குஜராத் உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது மோடிக்காகவா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பிரணாப்முகர்ஜியின் செயலாளர் ஒமிதா பவுல் மறுப்பு தெரிவித்தார். இது முழுக்க முழுக்க ஜனாதிபதி மாளிகையின் விருப்பப்படி ஏற்பாடு செய்யப்பட்ட உணவு வகைகள் என்று அவர் தெரிவித்தார்.