சபரிமலை: வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் ஐயப்பன் கோவிலின் பதினெட்டு படிகள்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 18 படிகளும் நம்முடைய வாழ்க்கைக்கு உதவும் 18 வகையான தத்துவங்களையும் உணர்த்துகின்றன.
சபரிமலை: ஐயப்பனை யார் வேண்டுமானாலும் தரிசிக்கலாம் என்று இருந்தாலும், விரதமிருந்து இருமுடி கட்டியவர்கள் மட்டுமே பதினெட்டு படிகளையும் தொட்டு வணங்கி ஏறமுடியும். தர்மசாஸ்தாவாக விளங்கும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்கவும் பதினெட்டு படிகளையும் ஏறவும் ஐயப்ப பக்தர்கள் விரும்புவார்கள். ஐயப்பன் கோவிலில் 18 படிகளும் நம்முடைய வாழ்க்கைக்கு உதவும் 18 வகையான தத்துவங்களையும் உணர்த்துகின்றன.
சபரிமலை ஐயப்பன், சின்முத்திரை தாங்கி, யோக நிலையில் அமர்வதற்கு முன்பு, தன்னுடைய கவசமாக இருந்த 18 ஆயுதங்களையும், பதினெட்டு படிகளோடு ஐக்கியாகும்படி அருளாசி வழங்கினாராம். இதனால் இந்த 18 படிகளையும் தரிசித்து மேலேறி வந்து தன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கு இந்த 18 ஆயுதங்களும் சூழ்ந்து எவ்வித ஆபத்தும் வராமல் காக்கும் என்பது ஐதீகம். அதோடு, இந்த 18 படிகளும் நம்முடைய வாழ்க்கைக்கு உதவும் 18 வகையான தத்துவங்களையும் உணர்த்துகின்றன.
பிரம்மச்சரிய கடவுளான சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதற்கு தினமும் ஆயிரக்கனக்கானோர் சென்று வருகின்றனர். இவர்களில் பெயரளவுக்கு விரதம் இருந்து தரிசிப்பவர்கள் இருக்கிறார்கள். துளசி மற்றும் ருத்ராட்சம் இணைந்த மாலையணிந்து 41 நாட்கள் முறையாக கடுமையான விரதமிருந்து, பூஜைகள் மேற்கொண்டு, இருமுடி தாங்கி, மலையேறி வந்து ஐயப்பனை தரிசிப்பவர்களும் உண்டு.
இருமுடி ஏந்தும் பக்தர்கள்
ஐயப்பனை யார் வேண்டுமானாலும் தரிசிக்கலாம் என்று இருந்தாலும், விரதமிருந்து இருமுடி கட்டியவர்கள் மட்டுமே பதினெட்டு படிகளையும் தொட்டு வணங்கி, பின்பு தர்மசாஸ்தாவாக விளங்கும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க முடியும் என்பது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஐதீகம். இதில் சிறிதும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி பதினெட்டு படிகளையும் பயபக்தியோடு வணங்கி ஐயப்பனை தரிசிப்பவர்கள் அனைவருமே தாங்கள் பிறவிப்பயனை அடைந்துவிட்டதாகவே மெய்சிலிர்ப்பதுண்டு.
பதினெட்டு படியேற முடியுமா
எவ்வளவு பெரிய விஐபியாக இருந்தாலுமே, இருமுடி கட்டிக்கொண்டு வந்தால் மட்டுமே, இந்த பதினெட்டு படிகளையும் தரிசித்து இதன் வழியாக மேலேறி சென்று ஐயப்பனை தரிசிக்க முடியும். இந்த பதினெட்டு என்ற எண்ணுக்கு என வரலாற்று சிறப்புகளும் உண்டு. கிராமப்புறங்களில் குல தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கும் கருப்பசாமி அமர்ந்திருப்பது, பதினெட்டு படிளையும் தாண்டி தான். அதனால் தான் அவரை பதினெட்டாம் படி கருப்பசாமி என்று அழைக்கிறோம்.
18 முக்கியத்துவம்
இந்துக்களின் வாழ்வில் முக்கிய அம்சமாக கருதப்படுவது நவகிரகங்கள். அதுபோலவே 9 அதி தேவதைகள். இவை இரண்டும் சேர்ந்ததே 18 படிகளாக சபரிமலையில் அமைந்திருக்கின்றன. இவைகள் தான் இருமுடி தாங்கி படியேறும் பக்தர்களை எந்தவிதமான தோஷங்களும் அணுகாமல் காத்து அருள்புரிகிறது. இந்த 18 படிகளும் நம்முடைய வாழ்க்கைக்கு உதவும் 18 வகையான தத்துவங்களையும் உணர்த்துகின்றன. அவை என்னவென்பதை நாம் பார்க்கலாம்.
படிகள் உணர்த்தும் தத்துவம்
மோகமும் கோபமும் ஒருவருக்கு கூடாது. நம்முடைய துன்பத்திற்கு காரணம் பாசம், பற்று ஆகியவை தான். இவற்றில் மோகம் ஏற்பட்டால் புத்தி கெட்டு நம் வாழ்க்கை நாசமாகிவிடும் என்பதை உணர்த்துகிறது. குரோதம் ஒருவனை அழிப்பதோடு, அவன் சுற்றத்தாரையும் சேர்த்து அழித்துவிடும் என்பதை முதல் இரண்டு படிகள் உணர்த்துகின்றன.
ஆசை வேண்டாம்
ஆசையே துன்பத்திற்கு காரணம். பேராசைக்கு இடமளித்தால், நம்மை முழுமையாக நாசம் செய்துவிடும். ஆண்டவனை அடைய முடியாது என்பதை மூன்றாம் படி உணர்த்துகிறது. எதன் மீதும் பற்று வைக்காமாலும், பாவ புண்ணியங்களைப் பற்றி கவலைப்படாமலும், இறைவனை அடையும் வழியில் நம்முடைய கவனத்தை செலுத்தவேண்டும் என்பதை நான்காம் படி உணர்த்துகிறது.
அசுர குணத்தை அண்ட விடக்கூடாது
மற்றவர்களை கெடுக்க வேண்டும் என்ற பொறாமையை மனதில் நினைத்து வாழ்பவனுக்கு. அந்த பொறாமையே அவனுடைய வாழ்க்கையை அழித்துவிடும் என்பதை ஐந்தாம் படி உணர்த்துகிறது. வீண் பெருமை பேசுவது என்பது நம்முடைய மனதில் அரக்க குணத்தை உண்டாக்கிவிடும். ஆகவே அந்த அசுர குணத்தை நம்முடைய மனதில் அண்டவிடக்கூடாது என்பதை ஆறாவது படி உணர்த்துகிறது.
கடமை செய்யுங்கள்
ஒருவன் தான் என்ற அகந்தை கொண்டு திரிந்தால், அவன் எப்போதுமே வாழ்க்கையில் முன்னேற முடியாது என்பதை ஏழாவது படியும், விருப்பு வெறுப்பின்றி தன்னுடைய கடமையை சிரமேற்கொண்டு செய்ய வேண்டும் என்பதை எட்டாவது படியும் உணர்த்துகிறது. ஒருவன் அகங்காரம் கொண்டு எந்த கருமத்தையும் கடமையையும் செய்தல் கூடாது என்பதை ஒன்பதாவது படி உணர்த்துகிறது.
மனம் நோகக் கூடாது
ஒருவன் மது, மாது போன்ற மயக்கத்தால், அற்ப புத்தியுன் செயல்பட்டு தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு கெடுதல் செய்யக்கூடாது என்பதை பத்தாம்படி உணர்த்துகிறது. நமக்கு மேல ஒருவன் இருக்கிறான் என்று உண்மையை உணர்ந்து கொண்டு, தன்னுடைய கடமையை செய்வதை பதினொன்றாம் படி உணர்த்துகிறது. மற்றவர்களின் மனம் நோகாமல் வாழவேண்டும். இறைவன் நினைப்பே எப்போதும் மனதில் இருக்கவேண்டும் என்பதை பனிரெண்டாம்படி உணர்த்துகிறது.
தூய மனதோடு தரிசனம்
உண்மையான பரம்பொருளாக இருக்கும் இறைவனை அறிய முடியாமல், நம்முடைய மனதை மறைத்து நிற்கும் இருளை பதிமூன்றாம்படி உணர்த்துகிறது. இறைவனை புறக்கண் மட்டுமல்லாது அகக்கண்ணான தூய மனதைக் கொண்டும் தரிசிக்க வேண்டும் என்பதை பதினாங்காம் படி உணர்த்துகிறது. இறைவனின் பரிசுத்தமான குணங்களை செவிகள் குளிர கேட்டு, பக்திக் கடலில் மூழ்க வேண்டும் என்பதை பதினைந்தாம் படி உணர்த்துகிறது.
பதினெட்டு படிகள் உணர்த்தும் பாடம்
இறைவன் குடிகொண்டுள்ள ஆலயத்திலிருந்து வெளிப்படுகின்ற தூய்மையான நறுமணத்தை மட்டுமே நுகர வேண்டும் என்பதை பதினாறாம் படி உணர்த்துகிறது. யாரையும் சுடு சொற்களால் பேசக்கூடாது என்பதை பதினேழாம் படி உணர்த்துகிறது இறைவனை வணங்குபோது, நம்முடைய மெய்யான உடம்பானது பூமியை தொடும் படி, இருகரம்
கூப்பி தரிசனம் செய்ய வேண்டும் என்பதை பதினெட்டாம் படி உணர்த்துகிறது. மேற்கண்ட பதினெட்டு வகையான குணநலன்களையும் ஆராய்ந்து தீயவவற்றை விட்டொழித்து, நல்ல குணநலன்களை மட்டுமே பின்பற்றி வாழ்க்கை என்னும் படிக்கட்டுகளை மிதித்து மேலே ஏறிச்சென்றால் இறைவனின் அருள் நமக்கு பூரணமாக கிடைக்கும் என்பதையே பதினெட்டு படிக்கட்டுகள் உணர்த்தும் பாடமாகும்.