மகர விளக்கு பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. குவிந்த பக்தர்கள்
சபரிமலை : மகரவிளக்கு கால பூஜைகளுக்காக, சபரி மலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. ஜனவரி 15ம் தேதி மகரஜோதி தரிசனம் நிகழ உள்ளது.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்படும். அதில் ஆண்டுக்கு ஒருமுறை சபரிமலை கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கி 41 நாட்கள் நடைபெற்றுவந்த மண்டல பூஜை நிறைவு பெற்றததையடுத்து, கடந்த 27ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது.
இதையடுத்து, மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணியளவில் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி, வழக்கமான நடைமுறைகளின்படி, நடை திறந்து தீபம் ஏற்றினார். பின்னர், தலைமை பூசாரி மேற்பார்வையில் நடை திறப்பு சடங்குகள் நடைபெற்றன.
இன்று இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை, 3 மணிக்கு நடை திறந்த பின், தந்திரி கண்டரு மகேஷ் மோகனரரு, நெய் அபிஷேகத்தை துவக்கி வைப்பார். ஜனவரி 19ம் தேதிவரை, எல்லா நாட்களிலும், அதிகாலை, 3.15 முதல், 11.30 மணி வரை, நெய் அபிஷேகம் நடக்கும் அனைத்து நாட்களிலும், காலை 7.30 மணிக்கு உஷபூஜை, மதியம் களபாபிஷேகம், உச்சபூஜை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம்,10 மணிக்கு அத்தாழ பூஜை நடக்கும்.
மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்தை காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். ஜனவரி 15ம் தேதி, மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு, பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறும். ஜனவரி 21ம் தேதி, காலை 7 மணிக்கு நடை அடைக்கப்படும்.