சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டலபூஜை,மகரவிளக்கு பூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு
சபரிமலை: மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. பூஜையில் 10 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பனுக்கு கார்த்திகை 1ஆம் தேதியன்று அதிகாலையிலேயே குளித்து முடித்து கோவில்களில் மாலை அணிந்து பக்தர்கள் விரதம் இருப்பார்கள். மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலும் இப்போதே தயாராகி வருகின்றது.
சபரிமலையில் கார்த்திகை மாத பூஜை, மார்கழி மாத மண்டல பூஜை, தை முதல் நாள் நடைபெறும் மகர விளக்கு பூஜை மற்றம் மகரஜோதி தரிசனத்திற்காகவும், கார்த்திகை 1ஆம் தேதி தொடங்கி 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.
நவம்பர்16ம் தேதி மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தொடங்கவிருப்பதால், பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் ஆலோசனை மேற்கொண்ட தேவசம்போர்டு 5000 பக்தர்களை பூஜைக்கு அனுமதிக்கலாம் என தெரிவித்திருந்தது.
இந்த ஆண்டு மகர விளக்கு பூஜைக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. பூஜையில் 10 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பூஜை காலங்களில் தினமும் 1,000 பக்தர்களையும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் 5,000 பக்தர்களையும் அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.