சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை நிறைவடைந்தது - கோவில் நடை அடைப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் இன்று நடந்து முடிந்து பின்னர் இரவு நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு பூஜைக்காக வரும் 30ஆம் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.
பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் காலை 11.40 மணி முதல் மதியம் 12.20 மணி வரை நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு பூஜைக்காக வரும் 30ஆம் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 16ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை காலத்தில் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டு கொரோனா காலமாக இருப்பதால் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அதிர்ஷ்டம் கிடைத்தது. கடந்த 39 நாட்களில் 71 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.
மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எடுத்துவரப்பட்ட தங்க அங்கிக்கு பக்தர்கள் வழி நெடுகிலும் வரவேற்பு கொடுத்தனர்.
நேற்று மாலை தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டு கோவில் தந்திரி மற்றும் மேல் சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைப் பெற்றுக்கொண்ட மேல்சாந்தி ஐயப்பனுக்கு தங்க அங்கியை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து சிறப்பான தீபாராதனை நடைபெற்றது. இதனை காண சன்னிதானத்தில் காத்திருந்த பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜைக்கான சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் நடைபெற்றன. இதற்காக முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட சான்றிதழுடன் கோவிலுக்கு வந்திருந்தனர்.
மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் இன்று காலை 11.40 மணி முதல் மதியம் 12.20 மணி வரை நடந்தன. தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்கு பின்னர் மண்டல பூஜை நிறைவு பெற்று, இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். மகரவிளக்கு பூஜை 2021ஆம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐயப்பன் கோவில் வருமானம் வெறும் 9 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.