மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. சரண கோஷம் முழங்க பக்தர்கள் சாமி தரிசனம்
Recommended Video
சபரிமலை: மண்டல-மகர விளக்கு பூஜைக்காக, புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. சரண கோஷம் முழங்க பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் மண்டல மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 60 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
தீபாராதனை
மேல் சாந்தி, கற்பூர ஆரத்தி காண்பித்து, கதவு திறக்கப்பட்டதும், கூடியிருந்த பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்கள் முழங்க ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதையடுத்து, 18ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படுகிறது. அதன்பிறகு புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் வைத்து, நடைபெறும்.
|
பக்தர்கள் வருகை
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள பக்தர்கள் பம்பா மற்றும் நிலக்கலில் தங்கியிருந்த நிலையில் மதியம் 2 மணி முதல் அவர்கள் சன்னிதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இன்று பிற பூஜைகள் எதுவும் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்துக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்படும்.
அனைத்து வயது பெண்கள்
இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில், தொடர்ந்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்காமல், 7 நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றியுள்ளது. எனவே கடந்த வருடம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு ஏற்ப, சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
பாதுகாப்பு
இந்த நிலையில், தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள் தரிசனத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வருபவர்களுக்கு வலதுசாரி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கடந்த வருடம் போல போராட்டம் நடத்த கூடும் என்பதால், சபரிமலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.