ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை திறப்பு.. சரணகோஷத்துடன் பக்தர்கள் பரவச தரிசனம்!!
சபரிமலை: ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை நேற்று மாலையில் திறக்கப்பட்டது. இதில் கலந்த கொண்ட திரளான பக்தர்கள் பரவச தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜைகள் தவிர ஒவ்வொரு மலையாள மாதம், தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. அதன்படி நேற்று மாலை 5.30 மணிக்கு ஐய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் கோவில் மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது அங்கு சாமி தரிசனத்திற்காக திரண்டிருந்த ஏராளமான ஐய்யப்ப பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா என்று சரண கோஷம் முழங்க வழிபட்டனர். பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று (சனிக்கிழமை) காலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜை ஆகியவற்றுடன் சிறப்பு பூஜைகளான நெய் அபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, களபாபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படிபூஜை ஆகியவை நடக்கிறது. 20-ந் தேதி வரை ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன் பின்னர் அன்றைய தினம் இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.