சபரிமலை ஐயப்பன் கோவில் மகரவிளக்கு பூஜை நிறைவுடன் நடை அடைப்பு - பிப் 13ல்தான் கோவில் திறக்கப்படும்
பட்டனம் திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஜனவரி 15ஆம் தேதியன்று மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசன நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து, ஐயப்பனுக்கு அணிவித்திருந்த திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி, முறைப்படி பந்தளம் மன்னர் குடும்ப பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இனி சபரிமலை ஐயப்பன் சன்னிதான நடை மீண்டும் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி மாசி மாத பூஜைக்காக 5 நாட்கள் திறக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் தரிசன சீசனை முன்னிட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி மாலையில் ஐயப்பன் சன்னிதான நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளும், படி பூஜை மற்றும் மண்டல பூஜைகளும் நடைபெற்றன. இவற்றை காண்பதற்காகவே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
இடையில், கடந்த டிசம்பர் 26ஆம் தேதி நிகழ்ந்த அரிய சூரியகிரகண நிகழ்வுக்காக மட்டும், அன்று காலை 7:30 மணி முதல் முற்பகல் 11:30 மணி வரையில் சபரிமலை ஐயப்பன் சன்னிதான நடை சாத்தப்பட்டது. பின்னர் பரிகார பூஜைகள் முறையாக செய்யப்பட்டு, அன்று பிற்பகல் 2:30 மணிக்கு மேல் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜைகள் நடைபெற்று, அன்று இரவு நடை சாத்தப்பட்டது.
மீண்டும், மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசன நிகழ்வுகளுக்காக கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று சபரிமலை சன்னிதான நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. கடந்த ஜனவரி 15ஆம் தேதியன்று மாலையில் மகர விளக்கு பூஜையும், அதைத் தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசன நிகழ்வும் நடந்து முடிந்தது.
மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசன நிகழ்வை காண்பதற்காகவே லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். இந்நிலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசன நிகழ்வு முடிந்த பின்னரும், நாள்தோறும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து ஐயப்பன் சன்னிதான நடை ஜனவரி 20ஆம் தேதி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 : கும்பத்திற்கு விரைய சனி, மீனத்திற்கு லாப சனி - பரிகாரங்கள்
இதனால், ஐயப்பனை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பக்தர்களின் தரிசனத்திற்கு பின்பு, கடந்த 20ஆம் தேதி இரவில் வழக்கமாக ஹரிவராசன பாடல் பாடப்பட்டு, இரவு 11 மணியளவில் நடை சாத்தப்பட்டது. பின்பு நேற்று அதிகாலை 3 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு மஹா கணபதி ஹோமம், அபிஷேகம், அதிகாலை நைவேத்தியம் ஆகிய பாரம்பரிய பூஜைகள் நடத்தப்பட்டன.
காலை 6 மணியளவில், பந்தளம் மன்னர் குடும்ப பிரதிநிதி சுவாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு அணிவித்திருந்த திருவாபவரணங்கள் அடங்கிய பெட்டி முறைப்படி, பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. சபரிமலை தேவஸ்தான பந்தளம் ராஜா அவர்கள் நடையை சாற்றி அதன் சாவிகளை தற்போது பொறுப்பில் இருக்கும் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரிகளிடம் ஒப்படைத்தார்.
இனி, மாசி மாத பிறப்பை முன்னிட்டு வரும் பிப்ரவரி 13ஆம் தேதியன்று மாலை 5 மணிக்கு மீண்டும் சபரிமலை சன்னிதான நடை திறக்கப்படும். தொடர்ந்து 5 நாட்கள் வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக ஐயப்பன் சன்னிதான நடை திறந்ததிருக்கும். பின்னர் பிப்ரவரி 18ஆம் தேதி இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகள் எந்தவித சங்கடமும் இன்றி நிறைவடைந்ததால் பக்தர்களும் தேவசம்போர்டு நிர்வாகிகளும் நிம்மதியடைந்தனர்.