சபரிமலை: புதிய திருப்பம்.. அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் செல்லலாம்.. தேவசம் போர்டு பல்டி
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதை ஆதரிப்பதாக திருவாங்கூர் தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Recommended Video
டெல்லி: சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதை ஆதரிப்பதாக திருவாங்கூர் தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இவ்வளவு நாட்கள் பெண்கள் நுழைவை எதிர்த்து வந்த திருவாங்கூர் தேவசம் போர்டு தனது நிலைப்பாட்டை திடீரென்று மாற்றியுள்ளது.
சபரிமலை தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஏற்றுக்கொள்வதாக கடந்த வருடம் அக்டோபர் 23ம் தேதி கூறியது.
சபரிமலை தீர்ப்பிற்கு எதிராக மொத்தம் 65 மனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் ஆர்.எஃப் நாரிமன், டி.ஒய். சந்திரசூட், ஏ.எம் கான்வில்கர், மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இதை விசாரித்து வருகிறது. கேரள அரசு சார்பாகவும் இதில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
வழக்கு தொடுத்தது
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களில் தேவசம் போர்ட்டின் மனுவும் ஒன்றாகும். அதாவது இந்த தீர்ப்பு தவறானது என்று கூறி அதை முதலில் சீராய்வு செய்ய கோரி மனுதாக்கல் செய்ததே திருவாங்கூர் தேவசம் போர்டுதான். இந்த நிலையில் இன்று விசாரணையில் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பாக வழக்கறிஞர் ராகேஷ் திவேதி ஆஜரானார்.
புதிய நிலைப்பாடு
திவேதி தனது வாதத்தில், சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதில் தவறு கிடையாது. சபரிமலையில் பெண்கள் நுழைவிற்கு எதிராக பழக்க வழக்கங்கள் இருந்ததாக வரலாற்று ஆவணங்கள் எதிலும் ஆதாரமும் இல்லை. அதனால் அதை கடைபிடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் பெண்கள் நுழைவை ஆதரிக்கிறோம் என்று கூறினார்.
அதிர்ச்சி கேள்வி
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த, சபரிமலையில் பெண்கள் நுழைவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கிய ஒரே நீதிபதியான இந்து மல்ஹோத்ரா ''என்ன இது? ஏன் நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறீர்கள். நீங்கள் தானே பெண்கள் நுழைவிற்கு எதிராக பேசியது'' என்று கேள்வி எழுப்பினார்.
நிலைப்பாடு என்ன?
இதையடுத்து திவேதி தனது வாதத்தில், நாங்கள் பெண்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறோம்.பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். பெண்கள் நுழைவை எதிர்ப்பது சம உரிமைக்கு எதிரானது. சமஉரிமைதான் அரசியலமைப்பின் முக்கிய நோக்கமே. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம், என்று கூறினார்.
அட
இந்த புதிய திருப்பத்தால் சபரிமலை வழக்கில் பெரிய மாற்றம் வர வாய்ப்புள்ளது. தேவசம் போர்ட் இந்த சீராய்வு மனு விசாரணையில், தீர்ப்புக்கு எதிராக பேசி தீர்ப்பை மாற்றும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது தேவசம் போர்ட் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி இருப்பதால் தீர்ப்பு எப்படி வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.