சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜையின்போது யானைகளை பயன்படுத்த கூடாது: ஹைகோர்ட்
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையின் போது யானைகளை பயன்படுத்த கேரள ஹைகோர்ட் தடை விதித்துள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு அம்மாநிலத்தோர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலில் ஆண்டு தோறும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் கலசபூஜை நடைபெறுவது வழக்கம்.
மகரவிளக்கு பூஜையின் போது யானைகள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். மேலும் வருடாந்திர திருவிழாவின் போதும் யானைகள் பயன்படுத்தப்படுகின்றனர்.
மகரவிளக்கு பூஜையின் போது யானைகள் பயன்படுத்துவதற்கு கோவில் உள்ள தந்திரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளை தெரிவிப்பதால் இதனை ஹைகோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. அதன்பேரில் யானைகள் பயன்படுத்துவது குறித்து கண்டரரு மகேஷ்வரரு, ராஜீவ்வரரு ஆகியோரிடம் விளக்கம் கேட்டப்பட்டது.
அப்போது அவர்கள் மகரவிளக்கு பூஜையின் போது யானைகள் பயன்படுத்த அவசியம் இல்லை. ஆனால் வருடாந்திர உற்சவத்தின் போது ஒரு யானை மட்டும் கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையின் போது யானைகளை பயன்படுத்த தடை விதித்தும், வருடாந்திர உற்சவத்தின் போது ஒரு யானை மட்டும் பயன்படுத்த அனுமதி அளித்து தீர்ப்பு உத்தரவிட்டனர்.