சபரிமலை கோவிலில் நாளை மகரவிளக்கு பூஜை.... திருவாபரணம் புறப்பட்டது - குவியும் பக்கர்கள்
மகரஜோதி, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருவாபரணப்பெட்டி பலத்த ஊர்வலத்துடன் கிளம்பியது.
பத்தனம்திட்டா: சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் நாளை மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. பொன்னம்பல மேட்டில் ஜோதி தரிசனம் காண பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.
பந்தளம் கொட்டாரத்தில் இருந்து ஐயப்பனுக்கு திருவாபரணங்களை ஊர்வலமாக கொண்டு செல்லும் நிகழ்ச்சி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காலம் முடிவடைந்தது. மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. நாள்தோறும் சுவாமிக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளை செய்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
மகரஜோதி தரிசனம்
சபரிமலையின் முக்கிய நிகழ்ச்சியான மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதில் பங்கேற்கவும், மகரஜோதியை தரிசிக்கவும் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.
பலத்த பாதுகாப்பு
மகர விளக்கு பூஜையின் போது சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி பந்தளம் கொட்டாரத்தில் நேற்று தொடங்கியது. இதற்காக சுவாமியின் நகைகள் வைத்திருக்கும் பெட்டகங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மதியம் 12 மணி அளவில் சபரிமலை நோக்கி திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது. இதையொட்டி வழிநெடுகிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.
ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலம்
திருவாபரணப்பெட்டி ஊர்வலம் சுவாமி ஐய்யப்பனின் பாரம்பரிய பெருவழிப் பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைப்பயணமாக நாளை மதியம் பம்பையை சென்றடைகிறது. அங்கிருந்து, திருவாபரண பெட்டிகள் நீலிமலை, சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.20 மணிக்கு சபரிமலைக்கு வந்து சேரும்.
பதினெட்டாம்படி
அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு, திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பதினெட்டாம் படிக்கு கீழ் பகுதியில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, 18ஆம் படி வழியாக திருவாபரண பெட்டிகளை சன்னிதானத்துக்கு எடுத்துச் செல்வார்கள். அப்போது பதினெட்டாம்படி வழியாக செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும். ஐய்யப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நிறைவடைந்த பிறகு இரவு 7 மணி அளவில்தான் பக்தர்கள் பதினெட்டாம்படியேற அனுமதிக்கப்படுவார்கள்.
ஜொலிக்கும் ஐயப்பன்
ஆபரணங்கள் அனைத்தும் சுவாமி ஐய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதைக் காணவும், அதைத் தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் மகர ஜோதியாக காட்சி தரும் சாமியை தரிசிக்கவும் ஏராளமான பக்தர்கள் குவியத் தொடங்குவார்கள். மகர விளக்கு, மகர ஜோதி தரிசனத்தையொட்டி சபரிமலையில் இதுவரை வரலாறு காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு நெய் அபிஷேகம்
நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து திருவிதாங்கூர் ராஜ வம்சத்தின் தலைநகரான திருவனந்தபுரம் கொட்டாரத்தில் இருந்து கொண்டு வரப்படும் சிறப்பு நெய் மூலம் நெய் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 1.27 மணிக்கு மகர சங்ரம பூஜை நடத்தப்பட்டு அதிகாலை 2 மணிக்கு நடை அடைக்கப்படும். தொடர்ந்து வழக்கம்போல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.