சபரிமலையில் பார்கோடுடன் இருமுடி விற்பனை - பூஜை நேரங்களையும் தெரிந்து கொள்ளலாம்
சபரிமலையில் பார்கோடுடன் கூடிய இருமுடிப்பை விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
பம்பை: சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பார்கோடுடன் கூடிய இருமுடி பை விற்பனையை கோவில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
கேரளமாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்தாண்டு மண்டல பூஜைக்கான திருவிழா கடந்த 16ஆம் தேதி தொடங்கியதைத் தொடர்ந்து தினமும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ரயில்,பேருந்துக்கள்,வேன்,கார் உள்ளிட்ட வாகனங்களில் குவிந்துவருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து இருமுடிகட்டி வரும் பக்தர்கள் போக விரதமிருந்து சன்னிதானத்தில் இருமுடிகட்டும் அய்யப்ப பக்தர்களும் உள்ளதால் அவர்களது வசதிக்காக சன்னிதானத்தில் இங்கு அமைக்கப்பட்டுள்ள ஸ்டால்களில் தேவசம் போர்டு அனுமதியோடு பார்கோடுடன் கூடிய இருமுடி பைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த பையில் இடம்பெற்றுள்ள பார்கோடை மொபைல் போனில் ஸ்கேன் செய்தால் பூஜைகள் நடக்கும் நேரம்,நடைதிறக்கும் நேரம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இடம்பெறுமாறு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த முயற்சி பக்தர்களுக்கு பலன்கொடுக்கும் என்று தேவசம் போர்டு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய இருமுடிப்பை கோவில் வளாகத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. கோவிலுக்கு வந்து இருமுடி கட்டும் பக்தர்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பக்தர்கள் தெரிவித்து உள்ளனர்.