சபரிமலை கோயில் மகர விளக்கு பூஜைக்காக திறப்பு,. குவாரண்டைனில் மேல்சாந்தி.. பரவும் கொரோனா
சபரிமலை: மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை நடைதிறக்கப்பட்ட நிலையில், சபரிமலை கோயில் மேல்சாந்தி தலைமை அர்ச்சகர் வி.கே.ஜெயராஜன் பொட்டி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் சபரிமலையிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பபன் கோயில் மண்டல பூஜையையொட்டி கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி திறக்கப்பட்டது.சன்னதிக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி. தரிசனத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை பக்தர்கள் கோயிலுக்கு வரும் போது சமர்பிக்க வேண்டும். அத்துடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. சன்னதி வந்த பின்னர் இரவு நேரத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை. பம்பை ஆற்றில் குளிக்க தடை. போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு 2000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த சூழலில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. முதல் நாளான இன்று பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. டிசம்பர் 31ஆம் தேதி (நாளை) முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி 5000 பேர் அனுமதிக்கப்படுவார்கள் .மகர விளக்கு பூஜை ஜனவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கோயில் நடை மீண்டும் ஜனவரி 20ஆம் தேதி அடைக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துளளது,
இந்நிலையில் கோயில் மேல்சாந்தி தலைமை அர்ச்சகர் வி.கே.ஜெயராஜன் பொட்டி கொரோனா தொற்று அச்சம் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மேல்சாந்தி வி.கே.ஜெயராஜன் சபரிமலையிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.