சபரிமலை மகர விளக்கு பூஜை கோலாகலம் - ஜோதி வடிவத்தில் காட்சி அளித்த ஐயப்பனை தரிசித்த பக்தர்கள்
சபரிமலை: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகர விளக்கு பூஜை கோலாகலமாக நடைபெற்றது. பொன்னம்பல மேட்டில் ஜோடி வடிவத்தில் காட்சி கொடுத்த ஐயப்பனை சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்குப் பூஜைத் திருவிழா ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி நாளில், சூரியன் மறைவுக்குப் பின்பு பொன்னம்பல மேட்டில் பேரொளி ஒன்று தோன்றி மறைகிறது. சபரிமலையில் இருந்து இந்தப் பேரொளியைக் காணும் பக்தர்கள், பொன்னம்பல மேட்டில் இருக்கும் ஐயப்பனே, ஜோதி வடிவில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பதாக நம்புகின்றனர்.

மகர ஜோதியைக் காண வழக்கமாக சபரிமலையில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்வார்கள். ஆனால், கொரோனா முன்னெச்சரிக்கையாக தற்போது, நாள் ஒன்றிற்கு ஐயாயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. பேட்டைத்துள்ளல், திருவாபரண ஊர்வலத்திலும் 50 பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
சபரிமலையில் நடைபெறும் மிக முக்கியமான பூஜைகளில் ஒன்று மகரசங்கரம பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் முகூர்த்தத்தில் நடைபெறும் இந்த பூஜையில் திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து வரும் நெய்தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இந்த நாளில் தான் மகரஜோதியும், மகர நட்சத்திரமும் காட்சி தரும். பந்தளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.
இந்த ஆண்டு சூரியன் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இன்று இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இன்று மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதனையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் கடந்த 12ஆம் தேதி பந்தளம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட திருவாபரணங்கள் சரங்குத்திக்கு வந்து பதினெட்டாம் படி வழியாக சன்னிதானத்திற்கு வந்தடைந்தன.
திருவாபரண பெட்டிகளுக்கு தேவசம்போர்டு அமைச்சர் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர். பின்பு அவை, ஐயப்ப சுவாமி கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு தந்திரி மற்றும் மேல்சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டன. திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
அப்போது பொன்னம்பல மேட்டில் 3 முறை, ஐயப்பசாமி தீப ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார் ஐயப்பன். ஜோதி வடிவத்தில் ஒளிர்ந்த ஐயப்பனை சாமியே சரணம் ஐயப்பா என்ற முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக, மகரஜோதி தினத்தில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்கள் பரண் அமைத்து தங்குவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
ஐயப்பனுக்கு வரும் 18ஆம் தேதி வரை நெய் அபிஷேகம் நடைபெறும். 19ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜை முடிந்து 20ஆம்தேதி காலை 6.30மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. இத்துடன் இந்த ஆண்டிற்காக மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காலம் முடிவடைகிறது.