சபரிமலை மண்டல பூஜைக்காக நடை திறப்பு: ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்
திருவனந்தபுரம்: சரண கோஷம் முழங்க சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரூ மகேஷ்வரரூ முன்னிலையில் மேல்சாந்தி தாமோதரன் போற்றி குத்து விளக்கேற்றி நடையை திறந்து வைத்தார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தேதி 48 நாட்கள் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படும். இந்த ஆண்டு இரண்டு நாளைக்கு முன்னதாகவே நேற்று நடை திறக்கப்பட்டது.
நடை திறப்பின்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் எழுப்பிய ‘சாமியே சரணம் அய்யப்பா' என்ற சரண கோஷம் சபரிமலை எங்கும் எதிரொலித்தது. முதல் நாளான நேற்றே சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
அதை தொடர்ந்து 18-ம்படியில் மேல்சாந்தி தாமோதரன் போற்றி இறங்கி வந்து ஆழியில் தேங்காய், நெய், கற்பூரம் ஆகியவற்றை போட்டு தீ மூட்டினார். இந்த ஆழியில்தான் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் தங்கள் நெய் தேங்காய்களை போட்டு அய்யப்பனை வழிபட்டு செல்வார்கள்.
அதை தொடர்ந்து சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்தி நாராயண நம்பூதிரிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்து கோவிலுக்குள் தந்திரி கண்டரரூ மகேஷ்வரரூ அழைத்துச் சென்றார்.
அதன் பிறகு இன்று அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி சபரிமலை அய்யப்பன் கோவில் நடையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம், உச்ச பூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை போன்றவை நடக்கிறது. இரவு 10.50 மணிக்கு அத்தாளப்பூஜைக்கு பின்னர் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு 11 மணிக்கு நடை சாத்தப்படும்.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் வசதிக்காக தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தினமும் 18 மணி நேரம் நடை திறந்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.