ஓணம்: சபரிமலை ஐயப்பன் கோவில் 12ம் தேதி நடை திறப்பு
சபரிமலை: ஓணம் மற்றும் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 12ம் தேதி நடை திறக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 12ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் முதல் ஓணம் சிறப்பு பூஜைகள் தொடங்கும். அன்று முதல் 16ம் தேதி வரை 4 நாட்களுக்கு சபரிமலை வரும் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு ஓண விருந்து வழங்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜையை தவிர, ஓணம், பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா, விஷூ பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
இந்த ஆண்டு கேரளாவில் திருவோணப் பண்டிகை வருகிற 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையும், புரட்டாசி மாத பூஜையும் சேர்ந்து வருவதால், சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 12ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில், மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்கிறார்.
இந்தநாட்களில் தினமும் வழக்கமான பூஜைகளுடன், சகஸ்ர கலசாபிஷேகம், களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உட்பட அனைத்து சிறப்பு பூஜைகளும் நடைபெறும். ஓணத்தை முன்னிட்டு, 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை பக்தர்களுக்கு ஓணம் விருந்து வழங்கப்படும்.
ஓணம் சிறப்பு பூஜைகளுக்கு இடையே புரட்டாசி மாத பிறப்பும் வருவதால் வரும் 13ம்தேதி முதல் தொடர்ந்து 9 நாட்கள் சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். 9 நாட்களிலும் தினமும் பக்தர்கள் நெய்யபிஷேகமும் செய்யலாம். 21ம் தேதி இரவு 10 மணியளவில் சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஓணம் பண்டிகை மற்றும் புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடையும்.