சரணகோஷம் முழங்க சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு - பக்தர்கள் தரிசனம்
சபரி மலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி நேற்று கோவில் நடை திறக்கப்பட்டது. சரணகோஷம் மலை முழுவதும் எதிரொலித்தது.
பத்தனம்திட்டா: மண்டலபூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. சரணகோஷம் முழங்க பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
டிசம்பர் 26ஆம் தேதி சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 41 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
இந்த இரு மாதங்களிலும் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து, இருமுடி ஏந்தி சபரிமலைக்கு வந்து சாமி ஐயப்பனை தரிசனம் செய்ய செல்வார்கள்.
சபரிமலை மண்டலபூஜை
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக நேற்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் கோவில் நடையை திறந்து, பூஜை செய்தார். இன்று காலை முதல் மண்டல பூஜைகள் தொடங்கியுள்ளன. சரண கோஷம் முழங்க பக்தர்கள் சாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
ஐயப்பன் தரிசனம்
41 நாட்கள் தினசரி பூஜைகள் நடைபெறும். டிசம்பர் 26ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று இரவு நடை அடைக்கப்பட்டு, மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது. ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும்.
கார்த்திகை மாத பிறப்பு
கார்த்திகை மாதம் நாளை பிறக்க உள்ளது. இன்றே பல பக்தர்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் 6 கோடி பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு
கோவில் நடை திறக்கப்பட்ட உடனே பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து 41 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்குப் பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.