சபரிமலை கோவில் பெயர் மாற்றம்: தேவசம் போர்டுக்கு கேரள அரசு கண்டனம்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலின் பெயர் மாற்றத்திற்காக கேரள அரசு தேவசம் போர்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா கோவில் என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோவிலின் பெயரை ஸ்ரீஐயப்ப சாமி கோவில் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு நேற்று முன்தினம் மாற்றியது.
இது குறித்து கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது,
கோவிலின் பெயரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு திடீரென மாற்றியிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இது தொடர்பாக தேவசம் போர்டு கேரள அரசிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. கடந்த சில மாதங்களாக சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல கால பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் பலமுறை நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பெயரை மாற்றுவது குறித்து தேவசம் போர்டு எந்த ஆலோசனையும் முன்வைக்கவில்லை.
அரசுக்கு தெரிவிக்காமல் அதை ரகசியமாக வைத்தது ஏன் என தெரியவில்லை. இது தொடர்பாக தேவசம் போர்டிடம் விளக்கம் கேட்கப்படும். சபரிமலை தந்திரியிடம் கேட்டபோது கோவில் பெயர் மாற்றம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்து விட்டார் என்றார்.
இது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரையார் கோபாலகிருஷ்ணன் கூறுகையில்,
சபரிமலை கோவிலின் பெயரை மாற்றுவது தொடர்பாக கடந்த மாதம் 5ம் தேதி நடந்த தேவசம் போர்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே சமயம் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. சபரிமலை கோவில் தொடர்பாக முடிவெடுக்க தேவசம் போர்டுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. போர்டின் முடிவை தேவைப்பட்டால் அரசு ரத்து செய்யலாம் என்றார்.