வைகாசி மாத பூஜைக்காக வரும் 14ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
சபரி மலை ஐயப்பன் கோயில் நடை வைகாசி மாத பூஜைக்காக வரும் 14ம் தேதி திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை செய்யவுள்ளார
திருவனந்தபுரம்: வைகாசி மாத பூஜைக்காக வரும் 14ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த திருவிழா நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.
இந்த திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விசு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலில் வருகிற 14ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை செய்கிறார்.
நடை திறப்பையொட்டி, அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் மட்டும் நடைபெறும்.
15-ம் தேதி முதல், தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை, படிபூஜை உள்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெறுகின்றன.19ம் தேதி மீண்டும் நடை அடைக்கப்படுகிறது.