மகர விளக்கு பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் குவியும் பக்தர்கள்
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் வரும் 14ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
கூட்ட நெரிசலை சமாளிக்க கோயில் நடை திறப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கடந்த மாதம் 27ஆம்தேதி நடைபெற்றது. இதையடுத்து அடைக்கப்பட்ட கோவில் நடை மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30ஆம்தேதி மீண்டும் திறக்கப்பட்டது.
ஜோதி வடிவில் ஐயப்பன்
ஐயப்பன் மகர ஜோதியாக பக்தர்களுக்கு வருகிற 15ஆம்தேதி தரிசனம் அளிக்கிறார். இதற்காக இருமுடி கட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தங்க ஆபரணங்கள்
மண்டல பூஜையின்போது, திருவிதாங்கூர் ராஜ குடும்ப ஆபரணங்களை அணிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்த அய்யப்பன் மகர விளக்கு பூஜை காலத்தில் பந்தளம் ராஜகுடும்ப ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார்.
சுத்தி பூஜைகள்
இந்த நிகழ்வு நடைபெறும் முன்பு கோவிலில் சுத்தி பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, சபரிமலை அய்யப்பன் கோவில் படி சுத்தி பூஜை வருகிற 12ஆம்தேதியும், விக்ரக சுத்தி பூஜை 13ஆம்தேதியும் நடக்கிறது. அதன் பிறகே பந்தளம் ராஜகுடும்ப ஆபரணங்கள் அணிந்து ஐயப்பன் தரிசனம் அளிப்பார். அப்போது சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சி அளிப்பார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கோவில் நடைதிறப்பு
பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதை ஒட்டி நடை திறப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை, மாலை 4 மணிக்கு பதில் 3 மணிக்கு திறக்கப்படுகிறது. அதுபோல் மதியம் 1 மணிக்கு பதில் 1.30 மணிக்கும், இரவு 10 மணிக்கு பதில் 11.30 மணிக்கும் அடைக்கப்படுகிறது.