சபரிமலை ஐயப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக திறப்பு - தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
சபரிமலை: கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 7 மாத இடைவெளிக்குப் பிறகு தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஆன்லைனில் புக் செய்து வரும் 250 பேர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் தற்போதைய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. சபரிமலை சன்னிதானம் மற்றும் மாளிகை புறம் கோயில்களுக்கு அடுத்த சீசனுக்கான மேல் சாந்திகளை குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படும்.
கொரோனா பரவல் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் தங்களது தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். மலை ஏறும் போது முக கவசம் அணிய தேவை இல்லை. மற்ற நேரங்களில் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். ஆனால் மலை ஏற உடல் தகுதி இருப்பதற்கான மருத்துவ சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்குட்பட்ட பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் கூட்டம், கூட்டமாக மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்ட போதிலும் பக்தர்கள் குளிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக சானிடைசர் கைவசம் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை செல்வதற்கு வடசேரிக்கரை, எருமேலி வழியாக மட்டுமே பக்தர்கள் செல்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்ற வழிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.