மகர விளக்கு பூஜை... சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது..!
பம்பை: மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாள்தோறும் 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நடப்பாண்டில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று திறக்கப்பட்டிருக்கிறது.
சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி கோவில் நடையை திறந்து தீப ஆராதனை காட்டினார். இதனைத் தொடர்ந்து சபரிமலை, மாளிகைபுரம் மேல் சாந்திகள் சுவாமிகளுக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது.
பின்னர் 18-ம் படிக்கு கீழே உள்ள ஆழி பகுதியில் தீ மூடப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு நாள்தோறும் வழக்கமாக நடைதிறக்கப்பட்டு பகல் 1 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு ஹரிவராசனத்துடன் நடை மூடப்படும்.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாள்தோறும் 1,000 பக்தர்களுக்கு மட்டுமே சபரிமலையில் அனுமதிக்கப்பட உள்ளது. சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இந்த எண்ணிக்கை 2,000 ஆக உயர்த்தப்படும். மிக முக்கியமான மண்டல, மகரவிளக்கு பூஜை நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 5,000 ஆக அனுமதிக்கப்படும்.
கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிவதுடன் கைகளில் சானிடைசர் வைத்திருக்க வேண்டும். சபரிமலையின் முதன்மையான சீசன் இது என்பதால் பல இடங்களில் இருந்து கேரளா அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. அத்துடன் நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன.