சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை! 30ல் மீண்டும் நடை திறப்பு
திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று மண்டல பூஜை விழா நடக்கிறது. சுவாமி தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருடத்திற்கான மண்டலகால பூஜைகள் கடந்த நவம்பர் 17ல் தொடங்கியது. 41 வது நாளான இன்று மண்டல பூஜை நடைபெறுகிறது.
மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். ஆரான்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட இந்த தங்க அங்கி நேற்று மதியம் பம்பையை அடைந்தது. தேவசம்போர்டு மற்றும் ஐயப்ப சேவாசங்க பிரதிநிதிகள் தங்க அங்கி யாத்திரைக்கு வரவேற்பு அளித்து பம்பை கணபதி கோயிலுக்கு கொண்டு சென்றனர். மாலை 3 மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்காக தங்க அங்கி கணபதி கோயிலில் வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து சன்னிதானம் நோக்கி புறப்பட்டது.
18ம் படியேறி கொண்டுவரப்பட்ட தங்க அங்கியை கோயில் தந்திரி கண்டரு ராஜீவரு, மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி ஆகியோர் பெற்று கோயிலுக்கு கொண்டு சென்றனர். இதன்பின் தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. இன்று பகல் 12.30 மணிக்கு பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். இன்று இரவு 10 மணியுடன் சபரிமலை கோயில் நடை சாத்தப்படும்.
28, 29 ஆகிய 2 நாட்களும் சபரிமலை கோயில் நடை மூடப்பட்டிருக்கும். மீண்டும் மகர விளக்கு கால பூஜைகளுக்கு டிசம்பர் 30ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.
மண்டல பூஜைக்காக சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பம்பையில் போலீசார் பக்தர்களை தடுத்து, சிறு சிறு குழுக்களாக தரிசனத்திற்கு அனுப்புகின்றனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பாதுகாப்புக்காகவும் ஏராளமான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு துறை அதிகாரிகள் சபரிமலையில் முகாமிட்டு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.