தமிழக வெள்ள நிவாரணத்திற்கு ரூ.30 லட்சம்: ஒ.பி.எஸ்சிடம் வழங்கிய திருவிதாங்கூர் தேவசம் போர்டு
திருவனந்தபுரம்: தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.30 லட்சத்திற்கான காசோலையை திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டது.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலை சர்வதேச புனித தலமாக்குவதற்கான நடவடிக்கைகளில் கேரள அரசு மும்முரமாக உள்ளது.
இது தொடர்பாக முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் கேரள அமைச்சர்கள் குழு ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து கோரிக்கையும் விடுத்துள்ளனர். இதன் கட்டமாக தென்மாநில அமைச்சர்கள் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட பம்பை சங்கம கலாச்சார மாநாடு பம்பையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், கேரள முதல்வர் உம்மன்சாண்டி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரையார் கோபால கிருஷ்ணன் வரவேற்று பேசினார். கேரள தேவஸ்தான அமைச்சர் சிவக்குமார், தமிழக அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், காமராஜ் மற்றும் தெலுங்கானா அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர்.
மாநாட்டில் பேசிய உம்மன் சாண்டி, சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் வளர்ச்சி பணிக்கு ரூ.625 கோடியில் ‘மாஸ்டர் பிளான்' தயாராக உள்ளது என்றார். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.30 லட்சத்திற்கான காசோலையை திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டது.
மாநாட்டில் பங்கேற்ற பிறகு அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலையில் இருமுடி கட்டு சுமந்து பம்பையில் இருந்து பக்தர்களோடு பக்தராக நடந்து சென்று சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தார்.