தன்மானம் முக்கியம்.. மன்னிப்பு கேளுங்கள்.. காங்.மேலிடத்தை சீண்டிய சச்சினின் கோரிக்கை.. நடந்தது என்ன?
ஜெய்ப்பூர்: சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திடம் முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்து இருப்பதாகவும், ஆனால் காங்கிரஸ் தரப்பு அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றும் கூறுகிறார்கள். இதுதான் அவர் தற்போது துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட காரணம் என்றும் கூறுகிறார்கள்.
ராஜஸ்தான் அரசியலில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதற்கான தீர்மானம் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
முதல்வர் அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக சச்சின் பைலட் அங்கு புரட்சி செய்தார். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இரண்டு பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டு இருக்கிறார் .
காங்கிரஸ் செம அதிரடி.. சச்சின் பைலட் துணை முதல்வர் பதவி பறிப்பு.. ஆதரவு அமைச்சர்கள் பதவியும் போச்சு
என்ன மெசேஜ்
இந்தநிலையில் சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திடம் முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்து இருப்பதாகவும், ஆனால் காங்கிரஸ் தரப்பு அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றும் கூறுகிறார்கள். மூத்த தலைவர்கள் மூலம் சச்சின் பைலட் தேசிய தலைமையான சோனியா காந்திக்கும், முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் முக்கியமான மெசேஜ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதுதான் அவரின் பதவி நீக்கத்திற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.
கோரிக்கை வைத்தார்
சச்சின் பைலட் அனுப்பிய மெசேஜில், எனக்கு கட்சியில் உரிய மரியாதை கிடைக்கவில்லை.இனியும் துணை முதல்வர் பதவியில் என்னால் நீடிக்க முடியாது. முதல்வர் பதவி வேண்டும். இல்லையென்றால் என்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நிதித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பொறுப்புகள் வேண்டும். அதோடு கட்சியின் தலைவர் பதவியை வேறு யாருக்கும் கொடுக்க கூடாது என்று கூறியுள்ளார்.
மன்னிப்பு
அதேபோல் தனக்கு எதிராக போலீசார் அனுப்பிய நோட்டீஸ் குறித்தும் சச்சின் பைலட் கோரிக்கை ஒன்றை வைத்தார். இரண்டு நாட்கள் முன் சச்சின் பைலட்டிற்கு ராஜஸ்தான் மாநில போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். முன்னதாக ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக கூறி இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பரத் மலானி, அஸோக் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் காங்கிரஸ் எம்எல்எக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார்கள் என்று புகார் வைக்கப்பட்டு உள்ளது.
நோட்டீஸ் அனுப்பியது
இது தொடர்பாக சச்சின் பைலட் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு அம்மாநில போலீஸ் நோட்டீஸ் அனுப்பியது. சட்ட பிரிவு 124(பி) மற்றும் 120 (பி), கீழ் சச்சின் பைலட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எம்எல்ஏக்களை வளைக்க முயன்றது தொடர்பாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதாவது அசோக் ஆட்சியை சச்சின் கலைக்க திட்டமிட்டதாகவும், அதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மன்னிப்பு
இந்த நிலையில் இப்படி தனக்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சச்சின் பைலட் கோரிக்கை வைத்துள்ளார். துணை முதல்வருக்கு எதிராகவே நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். இதற்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். எனக்கு சுயமரியாதை முக்கியம் என்று சச்சின் பைலட் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதுதான் காங்கிரசை சீண்டி உள்ளது.
நீக்கப்பட்டார்
முதலில் சச்சின் பைலட் வைத்த கோரிக்கையை காங்கிரஸ் ஏற்கலாம் என்று நினைத்து இருக்கிறது. ஆனால் இன்னொரு பக்கம் அசோக் கெலாட் தனது எம்எல்ஏக்களை ஒரு பக்கமாக இணைத்து தனது பலத்தை நிரூபித்தார். சச்சின் பைலட் பின்னே 18 எம்எல்ஏக்களுக்கு மேல் சேரவில்லை. இதனால் அசோக் கெலாட்டை மன்னிப்பு கேட்க சொல்வதை விட, சச்சின் பைலட்டை பதவியில் இருந்து நீக்குவது எளிதான விஷயமாக இருக்கும் என்று காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது . சச்சின் பின் பெரிய ஆதரவு இல்லாத காரணத்தால் காங்கிரஸ் துணிச்சலாக அவரை நீக்கியுள்ளது என்கிறார்கள்.